பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டதாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘ஆர்கனைசர்’ ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதுடன், வங்கதேசத்தின் தற்போதைய சூழல் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்குடன் சிஐஏ சதி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில், இந்தியா ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருங்கி சென்று, அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 30 அன்று, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் சிஐஏ ஏஜெண்ட் ஒருவரான டாரின்ஸ் ஜாக்சன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதே நாளில் தான் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் SCO மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்த ஜாக்சன், பங்களாதேஷ் இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போர்வையில், இந்திய பிரதமரை குறிவைத்துச் செயல்பட திட்டமிட்டதை ரஷ்யாவின் உளவு அமைப்பும் இந்தியாவின் ‘ரா’வும் (RAW) மோப்பம் பிடித்துள்ளன. இந்த இரு உளவு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையில்தான் ஜாக்சன் கொல்லப்பட்டதாக ‘ஆர்கனைசர்’ பத்திரிகை விவரிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி குறிவைக்கப்படுவது இது முதல்முறை அல்ல; அவர் 2004 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் முதல் தற்போது வரை, சுமார் எட்டு முறைக்கு மேல் அவர் மீது கொலை முயற்சிகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் சில:
2004-இல் குஜராத்தில், லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய நான்கு பேரை குஜராத் கிரைம் பிராஞ்ச் சுட்டுக் கொன்றது;
2013-இல் பாட்னாவில், பாஜக பிரதமர் வேட்பாளராக பிரச்சாரம் செய்தபோது காந்தி மைதானத்தில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன;
2016-இல் டெல்லியில், பணமதிப்பிழப்பிற்குப் பிறகு பிரதமர் மோதியை கொல்ல திட்டமிட்டதாக டெல்லி போலீஸுக்கு மிரட்டல் அழைப்பு வந்தது;
2018-இல் கர்நாடகாவில், சட்டமன்ற தேர்தலின்போது ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய நபர்கள் கொலைக்கு திட்டமிட்ட தகவல் கிடைத்தது;
மேலும், 2018-இல் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ‘இன்னொரு ராஜீவ் காந்தி சம்பவத்தைப் போல’ நிகழ்த்த திட்டமிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, அமெரிக்காவின் ஆதரவுடன் முகமது யூனுஸ் என்பவர் கொண்டு வரப்பட்டார். இவர் இந்தியாவை பொறுத்தவரை ஒரு அமெரிக்க ஏஜெண்டாகவே பார்க்கப்படுகிறார்.
யூனுஸ் சமீபத்தில் பாகிஸ்தான் இராணுவ ஜெனரல் ஷஹீர் ஷம்ஷத் மிஸ்ராவை சந்தித்தபோது, இந்தியாவின் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு வரைபடத்தை வழங்கியுள்ளார். இது இந்திய இறையாண்மையை வேண்டுமென்றே சீண்டும் ஒரு செயல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
யூனுஸின் இச்செயல், பங்களாதேஷ் விவகாரத்தை இந்தியா இனியும் வேடிக்கை பார்க்க கூடாது என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் பங்களாதேஷில் நடக்கவிருக்கும் தேர்தல்கள் மற்றும் யூனுஸின் அமெரிக்க ஆதரவு செயல்பாடுகள், இந்தியாவுக்கு வரவிருக்கும் காலங்களில் சவாலான சூழலை உருவாக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
