காதல் திருமணம் செய்தவர்களுக்கு குற்றம் செய்த வரி.. இப்படியும் ஒரு தமிழ்நாட்டு கிராமமா?

By Bala Siva

Published:

காதல் என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு உணர்வு என்ற நிலையில் காதலிக்காத மனிதன் பிணத்திற்கு சமம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் காதலித்து திருமணம் செய்தால் அவர்கள் அந்த கிராமத்திற்கு குற்ற வரி செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு வரி செலுத்தாவிட்டால் ஊரை விட்டு தள்ளி வைக்கப்படுவார்கள் என்ற நடைமுறை இன்னும் அமலில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு மாநிலமாக கருதப்பட்டாலும் இன்னும் இங்கு தான் சாதி சண்டைகள் அதிகம் நடைபெறுகிறது என்றும் சாதி பெயரில் சங்கங்கள், சாதி பெயரில் கட்சிகள், சாதி பெயரில் இட ஒதுக்கீடுகள் ஜாதியை பார்த்து வேட்பாளர்களை நிறுத்தும் நிலை என பல்வேறு சாதியை வைத்து நடக்கும் அம்சங்கள் உள்ளன.

பெயருக்கு பின்னால் தான் சாதியை போடவில்லை என்றாலும் இன்னும் சாதிய உணர்வு தமிழ்நாட்டு மக்கள் மனதில் உள்ளதாக தான் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தற்போதைய தலைமுறையினர்  மத்தியில் சாதி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  கோவை மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் காதல் திருமணம் செய்த ஜோடிகளுக்கு குற்றம் செய்ததற்கான வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறை பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

சுமார் 220 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தில் 95 சதவீதம் பேர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும் இந்த ஜாதியை சேர்ந்த தலைவர்கள்  காதல் திருமணம் செய்த ஜோடிகள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும் மேலும் கோவிலுக்குள்ளும் அந்த ஜோடி நுழையக்கூடாது என்று மிரட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.