சோர்ந்து கிடந்த சூப்பர் ஸ்டார் ரஜினி.. தூக்கி விட்ட அந்த ஒரு பாடல்..இமாலய சாதனை படைத்த படம்

By John A

Published:

அபூர்வ ராகங்கள் படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்துக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. பைரவி படத்தில் கதாநாயகனாக உயர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். தொடர்ந்து ரஜினியின் படங்கள் தியேட்டர்களில் ரசிகர்களைக் கொண்டாட வைத்தது. ரஜினியின் கேரியர் உச்சத்தில் இருந்த போது ரஜினியும் மதுவுக்கு அடிமையானார். இதனால் அவரது மன நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஷுட்டிங் உள்ளிட்டவற்றால் மன அழுத்தத்திற்கு ஆளான ரஜினி ஒரு கட்டத்தில் அவரின் குணாதிசயங்களில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. இதனால் மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் தான் ரஜினி நடித்த பிரியா படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. எனினும் அவரை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பளார்கள் தயங்கினர். காரணம் அப்போது அவர் மன நல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நேரத்தில் தான் பழைய நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான பாலாஜி ரஜினியை தனது அடுத்த படத்திற்கு புக் செய்கிறார். ரஜினியின் அப்போதைய நிலைமை பற்றி பலரும், பலவாறு கூறினர். படம் வெளியாகாது, நஷ்டம் வரும் என்றெல்லாம் எச்சரித்தனர். இதுகுறித்து நேரடியாக ரஜினியிடம் பாலாஜி கேட்க ரஜினியோ நம்பிக்கையுடன் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் நடிக்கிறேன் என்றார்.

தியேட்டரில் சிரிப்பு வெடி கன்பார்ம்.. மீண்டும் இணையும் கைப்புள்ள வடிவேலு- சுந்தர் சி கூட்டணி

இருந்தும் மனதில் ஏதோ ஓர் குறையுடன் சென்ற பாலாஜி படத்திற்குப் பாடல்கள் எழுத கண்ணதாசனைப் பார்த்திருக்கிறார். அப்போது ரஜினி பற்றிக் கூற, கண்ணதாசனோ நீ கவலையை விடு.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி பாலாஜியை அனுப்பி வைத்திருக்கிறார்.

அமிதாப் பச்சன் இந்தியில் நடித்து பெரும் பெற்றி பெற்ற டான் படம் தமிழில் பில்லா என உருவாகிறது. கண்ணதாசன் ரஜினிக்கு முதல் பாடலே

நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க…

என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பாடல்களை எழுதினார். படம் வெளியானது. பில்லாவின் வெற்றியைப் பார்த்து ஒட்டுமொத்த சினிமா உலகமே அரண்டு போனது. ரஜினி மீண்டும் கம்பேக் ஆனார். அதற்கு முக்கியக் காரணம் அவரின் உழைப்பும், கண்ணதாசனின் இந்தப் பாடல் வரிகளும்தான்.