தமிழ்த் திரையுலகின் இசையமைப்பாளர்களில் இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக கவனிக்க வைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். மேற்சொன்ன மூவரின் காம்பினேஷனையும் கலந்து புதுவித இசையைக் கொடுப்பதில் தன்னிகரற்று விளங்கி பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கலைப்புலி தாணு இவரை ஆளவந்தான் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்க, அதே நேரத்தில் கௌதம் வாசுதேவ் மேனனின் மின்னலே படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். எனவே ஆளவந்தான் பட வாய்ப்பினை அப்போது இழந்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.
எனினும் மின்னலே படம் பாடல்களுக்காகவே ஓடியது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக வசீகரா என்ற மெலடியும், அழகிய தீயே என இளசுகளை உசுப்பிவிட்டதும், பூப்போல் தீம் மீயூசிக்கிலும் புதுவித எனர்ஜியைக் கொடுத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். தொடர்ந்து கௌதம் மேனனின் பல படங்களில் இணைந்து இந்த காம்போ வாரணம் ஆயிரம், காக்க காக்க, என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு, பச்சைக் கிளி முத்துச்சரம், துருவநட்சத்திரம் போன்ற படங்களில் மறக்க முடியாத ஹிட் பாடல்களைக் கொடுத்தது.
இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒருமுறை தனது ஸ்டுடியோவிற்குத் தேவையான இசைக் கருவிகளை வாங்குவதற்காக ஜெர்மனி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் இருமுகன் படத்திற்காக இசையமைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் இயக்குநர் தரப்பிலிருந்து ஓர் அவசர போன்.
நாளை மறுதினம் ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகிறது. அந்த நேரத்தில் இருமுகன் டீசர் வெளியிட்டால் நன்றாக இருக்கும் அதற்கு உடனே பின்னணி இசை தேவை என்று கேட்டிருக்கிறார். அப்போது உடனே கையில் இருந்த கீபோர்டை எடுத்து ஜெர்மனி செல்ல 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால் பயணத்தின் முழுக்க டீசருக்கான பின்னனி இசைக் கோர்வையினை விமானத்தில் பறந்து கொண்டே போட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த ஏர்ஹோஸ்டஸ் இவர் என்ன செய்கிறார் என்று பைலட்டிற்குத் தகவல் தெரிவிக்க, அவர்களும் வந்து பார்த்திருக்கின்றனர். உடனே ஹாரிஸ் ஜெயராஜுக்கு மேலும் தேவையான வசதிகளைத் செய்து கொடுத்தனர். இப்படி இரவெல்லாம் கண்விழித்து ஒரு விமானத்தையே ரெக்கார்டிங் ஸ்டுடியோவாக மாற்றி இருமுகன் படத்திற்கான டீசர் இசையை அமைத்துக் கொடுத்தார். அதனை முதன் முதலில் கேட்டவர்கள் விமான பைலட்டும், ஏர் ஹோஸ்டஸ் ஊழியர்களும் தான்.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
