இளைய திலகம் பிரபுவுக்கு முதன் முதலாக அமைந்த சூப்பர் ஹிட் பாடல்.. தன் தாய் பாடிய தாலாட்டில் மெட்டமைத்த இசைஞானி..

By John A

Published:

சங்கிலி படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து முன்னனி நடிகராக ஜொலித்து இன்று குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் திலகத்தின் வாரிசு இளைய திலகம் பிரபு. இவர் நடித்த முதல் சில படங்களில் கவனிக்க வைக்கத் தவறியவர் அடுத்ததாக கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில், இசைஞானியின் இசையில் உருவான கோழிகூவுது திரைப்படத்தில் கவனிக்க வைத்தார்.

1982-ல் வெளியான கோழி கூவுது திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பாடல்கள். ஏதோ மோகம்.. ஏதோ.. தாகம் என்ற பாடல் இன்றும் ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு சூப்பர் ஹிட் பாடல்கதான் பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே பாடல்.. இந்தப் பாடலில் சில்க் ஸ்மிதா-பிரபுவின் ஜோடிப் பொருத்தம் ரசிகர்களைக் கவர்ந்தது. பிரபுவுக்கு முதல் ஹிட் பாடலாக அமைந்தது.

கானா உலகநாதனுக்கு வாய்ப்புக் கொடுத்த மிஷ்கின்.. பாடி, நடிக்க வைத்தது எப்படி தெரியுமா?

இந்தப் பாடலை இயற்றியவர் வைரமுத்து. இந்தப் பாடலுக்கான டியூனை இளையராஜா எங்கிருந்து எடுத்தார் தெரியுமா தனது தாய் பாடிய தாலாட்டுப் பாடலில் இருந்துதான். பொதுவாக குழந்தைகளைத் தூங்க வைக்க பெரும்பாலான தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாடலான மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூ சென்டாலே.. பாடலைக் கேட்டுறங்காத குழந்தைகளே கிடையாது. இந்தப் பாட்டின் ராகத்தினை அப்படியே எடுத்து இளையராஜா பூவே இளைய பூவே பாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். இன்றும் மாமன் அடிச்சானோ தாலாட்டுப் பாடலைக் கேட்டுவிட்டு பூவே இளைய பூவே பாடலைக் கேட்டுப் பாருங்கள் அப்படியே ஒன்றிப் போயிருக்கும்.

இவ்வாறு தான் கேட்டது, கற்றது என அனைத்தையும் கலந்து தான் ரசிகர்களுக்கு அழியா இசை விருந்தாக பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் இசைஞானி. மேலும் பிரபு-சில்க் ஸ்மிதா ஜோடிக்கு மற்றொரு ஹிட் பாடலாக விளங்கியது தான் சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் இடம்பெற்ற காளிதாசன்.. கண்ணதாசன்.. கவிதை நீ பாடல்.

இவ்விரண்டு பாடல்களும் இசைரசிகர்களால் மறக்க முடியாத கானங்கள்.