தலைகீழாக நிற்கச் சொன்ன பாலா.. மிரண்டு போன ஆர்யா.. நான் கடவுள் கதாபாத்திரம் உருவான விதம்

By John A

Published:

இயக்குநர் பாலாவின் படங்கள் என்றாலே வித்யாசமான ஹீரோ கதாபாத்திரங்களும், மொரட்டு சைக்கோ வில்லன்களும், சோகமான முடிவையும் கொண்டிருக்கும் என்பது எழுதப்படாத பாலாவின் சினிமா விதி. சேதுவில் ஆரம்பித்து தற்போது அவர் இயக்கி வரும் வணங்கான் வரை அனைத்து படங்களிலும் வித்யாசமான கதாபாத்திரங்களைக் கொண்டு படங்களை இயக்கியிருப்பார்.

சேதுவில் விக்ரமை தலையில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்பட்டவராகவும், சூர்யாவை இளம்வயதிலேயே தந்தையின் கொடுமை தாளாது சீர்திருத்தப் பள்ளியில் வளரும் சிறுவனாகவும், பிதாமகனில் விக்ரமை வெட்டியானாகவும், அவன் இவன் விஷாலை பெண்மை கலந்த இளைஞனாகவும் நடிக்க வைத்து அவர்களின் நடிப்புத் திறனை வெளிக் கொண்டு வந்தார். மேலும் அவர் படத்தில் நடித்து விட்டால் மற்ற இயக்குநர்களின் படங்களில் எளிதாக நடித்து விடலாம் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பைச் சொல்லித் தரும் பல்கலைக்கழகமாகவே இருக்கிறார் இயக்குநர் பாலா.

இவ்வாறு பாலாவின் நடிப்பில் ஆர்யாவின் வித்தயாசமான மிரட்டலான நடிப்பில் உருவான படம் தான் நான் கடவுள். அகோரியாக ஆர்யா நடித்த இந்தப் படம் அவரின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மாற்றுத்திறனாளிகள் பலரை நடிக்க வைத்து அவர்களுடைய வாழ்வில் படும் துன்பங்களை எடுத்துக் காட்டியது நான் கடவுள்.

பஞ்ச தந்திரம் படத்துல இதெல்லாம் நோட் பன்னிருக்கீங்களா? படம் முழுக்க வரும் 5 குறியீடு

நடிகர் ஆர்யா இயக்குநர் பாலாவைச் சந்தித்து அவரின் படங்களில் வில்லன் அல்லது ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்டுள்ளார். அப்போது பாலா அவரைப் பார்த்து அவரிடம் சில போட்டோக்களை காட்டி இதுபோல் செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார். போட்டோக்களைப் பார்த்த ஆர்யாவுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அதில் தலைகீழாக யோகாசனம் செய்வது போன்று பல யோகா போட்டோக்கள் இருந்தன.

இதுபோல் உங்களால் செய்யமுடியும் என்றால் நான் கடவுள் படம் உங்களுக்கு ரெடி என்று கூற, ஆர்யா தினமும் வீட்டில் தலைகீழாக நிற்கும் அந்த யோகாசனத்தை விடாமல் பயிற்சி எடுத்தார். பாலா கூறியது போலவே சரியாக 20 நாட்களில் தன்னுடைய தீவிர பயிற்சியின் காரணமாக கடினமான யோகாசனங்களை எளிதில் செய்யும் அளவிற்குப் பயிற்சி எடுத்தார்.

அதன்பின் அதனை பாலாவிடம் செய்து காட்ட, பாலா ஓகே சொல்லி நான் கடவுள் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். மேலும் அந்தப் படத்தில் அவரின் உழைப்பினைப் பார்த்து அதற்கு அடுத்ததாக அவன்-இவன் படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வைத்திருக்கிறார் பாலா. ஆர்யாவின் மிகச் சிறந்த படங்களில் நான்கடவுள் படத்திற்கே எப்போது முதலிடம் உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.