அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க. அதனால முகத்தை எப்பவும் பளபளன்னு பளிச்சுன்னு வச்சிக்கணும் இல்லையா… அதுக்காக உங்களுக்கு இதோ டிப்ஸ்கள்..!
கண்களைச் சுற்றி கருவளையம் இருந்தால், அழகான பெண்களைக் கூட அவலட்சணமாக்கிக் காட்டும். இதைப் போக்க, தேங்காய் எண்ணெயில் மஞ்சள்பொடி கலந்து குழைத்து, அதை வெதுவெதுப்பாகச் சுட வைத்துத் தினமும் குளிப்பதற்கு முன் கண்களைச் சுற்றி பூசி வைத்திருந்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் கருவளையம் காணாமல் போய்விடும்.
பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறவைத்து காலையில் மையாக அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம் சிகப்பழகு பெறும். எலுமிச்சம்பழச் சாறில் பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தடவி, ஒருமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் நல்ல நிறம் பெறும். ஆப்பிள் பழத்தை நறுக்கித் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால், கண்கள் நல்ல அழகு பெறும்.
உதட்டில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு சிறிதளவு பவுடரைத் தேய்த்துவிட்டுப் பின்னர் போட்டால் அதிக நேரம் லிப்ஸ்டிக் அழியாமல் இருக்கும். 2 தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி தயிர் இவற்றைக் கலந்து இரவில் முகத்தில் தேய்த்துவிட்டுப் பின்பு நன்றாகக் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்தால், பகலில் போட்ட மேக்கப் சுத்தமாக நீங்கி, முகம் இயல்பான நிலைக்கு வந்துவிடும். தினமும் சுத்தமான ஆமணக்கு எண்ணெயைப் புருவங்களில் தேய்த்தால் புருவ முடி கறுப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றும். பால் ஏட்டில் சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குழைத்து முகத்தில் தடவிக்கொண்டு, உலர்ந்ததும் கழுவ வேண்டும்.
சில நாட்கள் தொடர்ந்து இப்படிச் செய்தால் முகம் தக்காளி போல பளபளக்கும். முகம் பளபளப்பாக குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம் சென்றதும் முகத்தைக் கழுவி விடுங்கள். தினமும் இப்படிச் செய்தால் நாளடைவில் முகம் பளிச்சிடும்.