அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானுக்குள் இருக்கும் இலக்குகளை தீவிரமாக தாக்கி வரும் நிலையில், அமெரிக்க மண்ணில் ஈரானிய ‘ஸ்லீப்பர் செல்கள்’ மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுகள் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலை ஒரு ‘அச்சுறுத்தல்களின் சங்கமம்’ என்று விவரிக்கும் முன்னாள் உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஆலோசகர் சார்லஸ் மரினோ, ஒருங்கிணைந்த குழுக்களாகவோ அல்லது தனிநபர் தாக்குதல்தாரிகளாகவோ ஈரானிய ஆதரவாளர்கள் செயல்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்தில் அதிகப்படியான உயிர்ச்சேதத்தை விளைவிக்கக்கூடிய இலக்குகளான இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களை ஸ்லீப்பர் செல்கள் குறிவைக்கக்கூடும். குறிப்பாக, வரவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒரு தேசிய சிறப்பு பாதுகாப்பு நிகழ்வாக கருதப்பட்டாலும், அது தீவிரவாத குழுக்களுக்கு ஒரு பெரிய மேடையாக அமையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மும்பை தாக்குதல் பாணியில், பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் அமெரிக்காவிலும் நிகழ வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, பாதுகாப்பு நெறிமுறைகளை தானாகவே நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் தேசிய அச்சுறுத்தல் அறிவுறுத்தல் அளவை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எல்லைகள் வழியாக உரிய சோதனையின்றி நுழைந்த நபர்களுக்குள் இத்தகைய அச்சுறுத்தல்கள் ஒளிந்திருக்கலாம் என்பதே தற்போதைய முக்கிய கவலையாக உள்ளது. ஏற்கனவே டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் உள்ள ஒரு மதுக்கடையில், ஈரானிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த நபர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை, ஹிஸ்புல்லா அல்லது ஹமாஸ் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு தெஹ்ரானில் இருந்து புதிய உத்தரவுகள் தேவையில்லை என்றும், காமேனியின் படுகொலையே அவர்களை தூண்டிவிடும் ஒரு சமிக்ஞையாக அமையக்கூடும் என்றும் மரினோ கருதுகிறார்.
அதேவேளையில், ஏற்கனவே அமெரிக்காவிற்குள் வசித்து கொண்டிருக்கும் தனிநபர் தாக்குதல் செய்பவர்கள் அதிக ஆபத்தானவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் எந்தவொரு வெளிநாட்டு அமைப்பத்துடனும் நேரடி தொடர்பில் இருக்கமாட்டார்கள் என்பதால், இவர்களை முன்கூட்டியே அடையாளம் காண்பது மிகவும் கடினம். ஈரானிய அரசு ஊடகங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை பகிரங்கமாக பெயரிட்டு வருவது, இத்தகைய நபர்களை வன்முறையில் ஈடுபட தூண்டும் செயலாக பார்க்கப்படுகிறது. FBI இயக்குனர் காஷ் படேல் நாடு முழுவதும் உள்ள குழுக்களை திரட்டி, சாத்தியமான சதித்திட்டங்களை கண்காணித்து முறியடிக்க உத்தரவிட்டுள்ளார்.
மனிதர்கள் மீதான தாக்குதல்கள் ஒருபுறமிருக்க, இணையவெளியில் ஈரான் தனது கைவரிசையை காட்டக்கூடும் என்று டிஜிட்டல் பாதுகாப்பு நிபுணர் ஜேம்ஸ் நைட் எச்சரித்துள்ளார். ஈரானிய ஹேக்கர்கள் ஏற்கனவே அமெரிக்காவின் வங்கி அமைப்புகள், மின் விநியோக கட்டமைப்பு மற்றும் மருத்துவமனைகளின் இணையதளங்களை சோதித்து பார்த்து வருகின்றனர். அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானின் மத்திய இணைய கட்டமைப்பை சிதைத்திருந்தாலும், அமெரிக்காவிற்குள் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் ஹேக்கர்கள் மூலம் ‘காமிகாசே’ பாணி இணைய தாக்குதல்களை நடத்தி தற்காலிக மின் தடையையோ அல்லது வங்கிச்சேவை முடக்கத்தையோ ஏற்படுத்த ஈரான் முயலக்கூடும்.
இறுதியாக, காமேனியின் படுகொலையை தொடர்ந்து ஈரானின் அதிகார கட்டமைப்பு சிதறுவது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று உளவுத்துறை நிபுணர் ஸ்டெபானோ ரிடோண்டேல் எச்சரிக்கிறார். ஈராக் போருக்கு பிறகு ஐஎஸ்ஐஎஸ் உருவானது போல, ஈரானின் சிதறிய ராணுவக்குழுக்கள் புதிய எல்லை கடந்த பயங்கரவாத அமைப்புகளாக மாறக்கூடும். போர் முடிவுக்கு வந்தாலும், ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்களிடம் இருந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் எளிதில் முடிந்துவிடாது. அமெரிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆனால் அச்சப்பட தேவையில்லை என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
