தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், ஆளும் திமுக கூட்டணிக்கு இணையாக ஒரு பலமான மாற்று அணியை உருவாக்க துடிக்கும் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸை வளைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில், த.வெ.க தரப்பிலிருந்து காங்கிரஸுக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படும் ‘ஆஃபர்கள்’ அரசியல் வட்டாரத்தை அதிர செய்துள்ளன. குறிப்பாக, 70 சட்டமன்ற தொகுதிகள், ஆட்சியில் 6 முக்கிய அமைச்சரவை பதவிகள் என அதிகார பகிர்வுக்கு விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிரடி திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸுக்கு 40 சதவீத இடங்கள் மற்றும் 8 மாநகராட்சி மேயர் பதவிகளை ஒதுக்க த.வெ.க முன்வந்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, 2029 நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு வழங்க தயார் என விஜய் தரப்பு பெரிய வாக்குறுதிகளையே அள்ளி வீசியுள்ளது. திமுகவில் ஒரு சில இடங்களுக்காகவும், கௌரவமான தொகுதி பங்கீட்டிற்காகவும் போராடி வரும் காங்கிரஸை, ‘ஆட்சி அதிகாரம்’ என்ற கவர்ச்சிகரமான துருப்புச்சீட்டை வைத்து இழுக்க த.வெ.க போடும் இந்த திட்டம், சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்திற்கு மேல் த.வெ.க தலைமையை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசாமல், ரகசியமான சந்திப்புகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புவதை விஜய் தரப்பு ரசிக்கவில்லை. “தங்களுக்கு ஒரு தெளிவான நிலைப்பாடு வேண்டும், ரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம் காலத்தை கடத்த வேண்டாம்” என்பதில் த.வெ.க மேலிடம் மிகவும் உறுதியாக இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்துகொண்டே த.வெ.க-விடமும் பேச்சு நடத்தும் காங்கிரஸின் ‘டபுள் கேம்’ இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் கோபமடைந்த த.வெ.க முக்கிய நிர்வாகிகள், “இனிமேல் ரகசிய ஹோட்டல் சந்திப்புகளுக்கோ அல்லது நள்ளிரவு தொலைபேசி உரையாடல்களுக்கோ இடம் கிடையாது; எங்களை ஏமாற்ற முடியாது” என்று காங்கிரஸுக்கு கறாரான எச்சரிக்கை விடுத்துள்ளனர். கூட்டணி குறித்த பேச்சுகளை முறைப்படி கட்சி அலுவலகத்திற்கு வந்து பேசுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம் தங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முயல்வதை உணர்ந்த விஜய் தரப்பு, தற்போது தனது கதவுகளை சற்றே இருக்கமாக சாத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் திமுக மற்றும் த.வெ.க என இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள், இப்போது விஜய் தரப்பின் இந்த ‘உஷார்’ நடவடிக்கையால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். ஒருபுறம் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க த.வெ.க-வை பகடைக்காயாக பயன்படுத்த நினைத்த அவர்களின் கணக்கு இப்போது தடம் புரண்டுள்ளது. இரு தரப்பிலும் உண்மையான பிடிமானம் இல்லாத நிலையில், ‘கதர்கள்’ தற்போது கையை பிசைந்துகொண்டு அடுத்தகட்ட நகர்வுக்காக டெல்லி மேலிடத்தின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இறுதியில், கனிமொழிக்கும் ராகுல் காந்திக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக கூட்டணி உறுதிப்படுமா அல்லது த.வெ.க-வின் ‘பவர் ஷேரிங்’ ஆஃபர் காங்கிரஸை திசைதிருப்புமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும். அதிகாரத்தில் பங்கு என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஓடும் சில காங்கிரஸ் சீனியர்கள், விஜய்யின் நிபந்தனைகளை ஏற்று திமுகவை விட்டு வெளியேற துணிகிறார்களா அல்லது வழக்கம்போல திமுகவின் நிழலிலேயே தஞ்சம் அடைகிறார்களா என்பதை பொறுத்தே 2026-ன் தேர்தல் களம் அமையும். இப்போதுள்ள நிலையில், த.வெ.க-வின் கறார் போக்கு காங்கிரஸை ஒரு இக்கட்டான அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தள்ளியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
