தமிழகத்தின் அரசியல் களம் இன்று ஒரு முன்னெப்போதும் இல்லாத மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியில் நிற்கிறது. கடந்த 75 ஆண்டு கால திராவிட அரசியல் வரலாற்றில், ஒரு தலைவருக்கு இத்தனை பலமான கால சூழ்நிலையும் , ஒட்டுமொத்தச் சமூகத்தின் ஆதரவும் ஒருசேர கிடைத்ததில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நடிகர் விஜய் தன் தமிழக வெற்றிக் கழகம் மூலம் களமிறங்கியுள்ள நிலையில், அவருடைய தனிப்பட்ட கவர்ச்சி, மூத்த தலைவர்களின் ஆதரவு, மக்கள் மனநிலை மாற்றம், மற்றும் தொழில்நுட்ப பலம் ஆகிய அனைத்தும் அவருக்கு சாதகமான ‘பிளஸ்’ புள்ளிகளாக அமைந்துள்ளன.
அரசியல் வெற்றிக்கு அடிப்படையான அசைக்க முடியாத மக்கள் கவர்ச்சி விஜய்க்கு மிகப்பெரிய அனுகூலம். இவரது மக்கள் மன்றம் ஒரு சாதாரண ரசிகர் மன்றமாக இல்லாமல், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றி, ஓர் அரசியல் அமைப்பின் அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. இவரது பாப்புலாரிட்டி கட்சி ஆதரவாளர்களை தாண்டி, அனைத்து தரப்பு மக்களிடமும் ஆழமாக ஊடுருவி உள்ளது. தமிழக மக்கள் எப்போதுமே ஒரு ‘மாஸ் ஹீரோ’ அல்லது ‘கல்ட் லீடரை’ பின்பற்றுவார்கள் என்பதால், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிற்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பும் தகுதியும், கவர்ச்சியும் விஜய்க்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது.
அரசியல் கவர்ச்சி மட்டும் போதாது, களத்தில் காய்களை நகர்த்த அனுபவம் தேவை. இந்த தேவையைத்தான் மூத்த தலைவர் செங்கோட்டையனின் இணைப்பு நிறைவு செய்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவமும், அ.தி.மு.க.வின் உட்கட்சி வியூகங்கள் பற்றிய அறிவும் செங்கோட்டையனுக்கு உண்டு. இவரது வருகை, த.வெ.க.வின் அடித்தளத்தை வலிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கள நிர்வாகம், தேர்தல் கால உத்திகள் போன்ற முக்கிய விஷயங்களில் வழிகாட்டியாக இருக்கும். மேலும், செங்கோட்டையன் விலகல் மூலம், அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை எளிதில் த.வெ.க.வுக்குள் கொண்டுவரும் ஒரு ‘சேர்ப்பு பாலம்’ விஜய்க்கு கிடைத்துள்ளது.
விஜய்க்கு சாதகமாக அமைந்திருக்கும் மிக முக்கியமான புள்ளி, தமிழகத்தின் பொதுவான மக்கள் மனநிலை மாற்றம் தான். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் மக்கள், ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றால் சலிப்படைந்து, ஒரு புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த சூழலில், திராவிட கட்சிகளின் ஆதிக்கம் குறையும்போது, இயல்பாகவே மாற்று சக்தியாக விஜய் உருவெடுக்கிறார்.
வரவிருக்கும் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க போகும் Gen Z இளைஞர்கள் வாக்காளர்களும், சமூக வலைத்தளங்களும் விஜய்க்கு மிகப்பெரிய பலம். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது இப்படி ஒரு பலம் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை. த.வெ.க. மாநாடுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் உருவாகும் அலை, விஜய்யின் கட்சிக்கு ஒரு பெரும் ‘இளைஞர் வாக்கு வங்கியை’ உறுதி செய்கிறது. மேலும், ட்விட்டர் , ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மூலம், பிரச்சாரம் மற்றும் த.வெ.க.வின் செய்திகளை அதிவேகமாக பரப்புதல் ஆகியவற்றை விஜய் குழுவினரால் மற்ற கட்சிகளைவிட துரிதமாகச் செய்ய முடியும். சமூக வலைத்தளங்கள் இன்று விஜயின் மிகப்பெரிய ‘ஆயுதம்’ என்றால் அது மிகையல்ல.
கடந்த 75 ஆண்டுகளில், ஒரு கட்சி தலைவருக்கு இத்தனை அம்சங்களும் ஒருசேர சாதகமாக அமைந்ததில்லை. அ.தி.மு.க. ஒற்றை தலைமையால் பிளவுபட்டு, முக்கிய தலைவர்களை இழந்து தவிக்கிறது; தி.மு.க. வாரிசு அரசியல் விமர்சனத்தில் உள்ளது. இந்த சூழ்நிலை, விஜய்க்கும் த.வெ.க.வுக்கும் சரியான தலைமை வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. விஜய்யின் தனிப்பட்ட மக்கள் கவர்ச்சி, செங்கோட்டையன் போன்ற அனுபவமிக்கவர்களின் திட்டமிடல், திராவிடத்தை நிராகரிக்கும் மக்களின் மனநிலை, மற்றும் சமூக வலைத்தளங்களின் சக்திவாய்ந்த பயன்பாடு ஆகிய அனைத்து அம்சங்களும் இணைந்து, தமிழக அரசியலின் திசையை மாற்றும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனைக்கு விஜய் தயாராகி வருகிறார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
