உலகின் பெரும் பணக்கார மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 உச்சிமாநாடு, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்ற உலகத் தலைவர்கள், மரபுக்கு மாறாக, மாநாட்டின் தொடக்கத்திலேயே தலைவர்கள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர். உச்சிமாநாட்டை புறக்கணித்த அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தலைவர்கள் பிரகடனங்கள் வழக்கமாக ஜி20 மாநாட்டின் முடிவில்தான் ஏற்கப்படும். ஆனால், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா உச்சிமாநாட்டை தொடங்கிய உடனேயே, அமெரிக்கா தவிர்த்த மற்ற உறுப்பு நாடுகள் ஒருமனதாக இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் வின்சென்ட் மக்வென்யா தெரிவித்தார்.
இந்த பிரகடனத்தில் என்னென்ன விவரங்கள் உள்ளன என்பது குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால், ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாட்டிற்கு இது ஒரு பெரிய வெற்றியாகும் என்றும், குறிப்பாக ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தென்னாப்பிரிக்காவின் நோக்கம் இதன் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட புறக்கணிப்பால் இந்த உச்சிமாநாடு களையிழந்துள்ளது. மேலும், அமெரிக்க குழுவினர் இல்லாத நிலையில் தலைவர்கள் பிரகடனத்தை வெளியிடக் கூடாது என்று தென்னாப்பிரிக்கா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்கா இனவெறிக்கு எதிரான வெள்ளையர்-எதிர்ப்பு கொள்கைகளை பின்பற்றுவதாகவும், ஆப்பிரிக்காவினர் வெள்ளை சிறுபான்மையினரை துன்புறுத்துவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டி இந்த மாநாட்டை புறக்கணித்தார்.
மேலும், தென்னாப்பிரிக்காவின் ஜி20 நிகழ்ச்சி நிரலில் உள்ள காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய சமத்துவமின்மை மீதான கவனம் குறித்து அமெரிக்க நிர்வாகம் தனது எதிர்ப்பை முன்னரே தெளிவுபடுத்தியிருந்தது.
மாநாட்டை தொடங்கி வைத்த அதிபர் ரமபோசா, “நாம் இப்போது பிரகடனத்தை ஏற்கலாம்” என்று சொன்னார். அவர் சொல்வதற்கு முன் அனைத்து கேமிராக்களும் அணைக்கப்பட்டு ரகசியமாக பிரகடனம் செய்யப்பட்டது.
பிரகடனம் ஒருமனதாக ஏற்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினாலும், அமெரிக்காவின் நட்பு நாடான அர்ஜென்டினா இந்த பிரகடனத்தை அங்கீகரிக்கவில்லை என்று கூறியது. அதிபர் டிரம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அர்ஜென்டின அதிபர் ஜேவியர் மிலேய் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவில்லை.
ஜி20 என்பது 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றை கொண்ட 21 உறுப்பினர்கள் குழுவாகும். இந்த குழு, உலக பொருளாதாரத்தில் சுமார் 85%, சர்வதேச வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள் தொகையில் பாதியையும் பிரதிபலிக்கிறது.
ஜி20 தலைமையை பூர்த்தி செய்யும் தென்னாப்பிரிக்கா, ஏழை நாடுகளுக்கு காலநிலை மீட்சியில் உதவுதல், கடன்களை குறைத்தல் மற்றும் பசுமை ஆற்றல் ஆதாரங்களுக்கு மாறுதல் ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்தியது. இந்த உச்சிமாநாட்டின் முடிவில் ஜி20 தலைமை பொறுப்பைத் தென்னாப்பிரிக்காவிடமிருந்து அமெரிக்கா ஏற்கவுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் இளநிலை அதிகாரியிடம் ரமபோசா பொறுப்பை ஒப்படைக்க மறுத்ததால், ஞாயிற்றுக்கிழமை பொறுப்பு ஒப்படைக்கும் விழா நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
