தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத நகைச்சுவை மற்றும் இசை காவியமான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம், அதன் அபாரமான வெற்றியை படக்குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள் எவரும் முதலில் கணிக்கவில்லை. நாயகன் ராமராஜனே அதிகபட்சமாக சில வாரங்களே ஓடும் என்று கணித்த நிலையில், அந்த படம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம், விநியோகிஸ்தர்கள் ஒவ்வொருவரையும் கோடீஸ்வரராக்கியது. குறிப்பாக, தயாரிப்பாளரிடமிருந்து சம்பளத்திற்கு ஈடாக விநியோக உரிமையை பெற்ற நடிகர் ராமராஜன், மலைக்க வைக்கும் லாபத்தைக் கண்டார்.
‘கரகாட்டக்காரன்’ படம் வெளியானபோது, நடிகர் ராமராஜன், “நான் நடித்த படம் என்பதால், இது ஐந்து வாரங்கள் ஓடினால் போதும். அதிகபட்சமாக ஏழு வாரங்கள் ஓடினால் அதுவே எனக்கு பெரிய வெற்றிதான்” என்று கணித்தார்.
ஆரம்பத்தில் விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்குவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. காரணம், அந்த நேரத்தில் ஆக்ஷன் படங்களின் ஆதிக்கம் இருந்ததால், ஒரு கிராமிய நகைச்சுவை இசைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று அவர்கள் நம்பவில்லை.
ஆனால், ராமராஜனின் கணிப்பை தகர்த்தெறிந்து, ‘கரகாட்டக்காரன்’ மதுரை நகரில் மட்டும் ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடி, தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே அபூர்வமான சாதனையைப் படைத்தது.
படத்தின் வெற்றிக்கு முன்னதாக, தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி அவர்கள் நடிகர் ராமராஜனுக்கு சம்பளமாகக் கொடுக்க வேண்டிய 7 லட்சம் ரூபாய்க்கு பதிலாக, படத்தின் இரண்டு பெரிய விநியோக பகுதிகளின் உரிமையை எழுதி கொடுத்தார்.
ஒன்று மதுரை விநியோக உரிமை: ரூ. 5 லட்சம் மதிப்புடைய பகுதி. இரண்டு சென்னை விநியோக உரிமை ரூ. 2 லட்சம் மதிப்புடைய பகுதி. ராமராஜன், தனக்கு பெரிய விநியோக அனுபவம் இல்லாததாலும், பணம் தேவைப்பட்டதாலும், தனக்கு கிடைத்த சென்னை சிட்டி விநியோக உரிமையில் ஒரு பகுதியை பிரித்து, அதை ஒரு பத்திரிகையாளருக்கு வெறும் ரூ. 70,000 விலைக்கு விற்றுவிட்டார். அந்த பத்திரிகையாளரிடம் லாபம் வந்தால் வைத்துக்கொள்ளுங்கள், நஷ்டம் வந்தால் தாங்கி கொள்ளுங்கள் என்று கொடுத்தார். படம் வெளியான பிறகு, எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் படங்கள் கூட இப்படி ஹவுஸ்ஃபுல் ஆனதில்லை. காலை முதல் இரவு ஷோ வரை ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்ஃபுல் ஆனது. டிக்கெட்டுகள் பத்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன. படம் வெளியான பிறகு, தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் போர்டு விழும்படி தமிழ்நாட்டில் அந்த படம் ஓடியது.”
ராமராஜன் அளித்த சென்னை பகுதி விநியோக உரிமையை ரூ. 70,000 முதலீட்டில் பெற்ற பத்திரிகையாளருக்கு ரூ. 5.75 லட்சம் லாபம் கிடைத்தது என்றால், ராமராஜனின் ஒட்டுமொத்த லாபம் எவ்வளவு இருந்திருக்கும் என்று கணக்கிடலாம்:
சென்னை சிட்டி உரிமையின் ஒரு சிறு பகுதிக்கே ரூ. 5.75 லட்சம் லாபம் என்றால், ராமராஜன் தன்வசம் வைத்திருந்த மதுரை விநியோக உரிமை மற்றும் சென்னையின் மீதமுள்ள உரிமைகள் மூலமாக, அவர் சம்பளமாக பெறவேண்டிய ரூ. 7 லட்சத்தை விட, பத்து மடங்கிற்கு மேல் லாபத்தை குவித்திருப்பார். மதுரை பகுதியின் மாபெரும் வெற்றியை வைத்து பார்க்கும்போது, அவர் பல கோடி ரூபாய் லாபத்தை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்கள், மாவட்டங்கள் உரிமைகளை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவரும், ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு பெற்ற உரிமையின் மூலம், எதிர்பாராத அளவில் பல மடங்கு இலாபத்தை அள்ளி சென்றனர்.
‘கரகாட்டக்காரன்’ படம், அதன் கதை, இசை, நகைச்சுவைக்காக மட்டும் பேசப்படவில்லை. அது ஒரு சினிமா விநியோக வரலாற்றில் ஒரு நட்சத்திரத்தின் சாமர்த்தியத்திற்கும், எதிர்பாராத வகையில் மக்களின் ரசனை மாறியதற்கும் சாட்சியாகவும், ஒரு நிதி வெற்றியாகவும் இன்றும் பேசப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
