உலகளாவிய பொருளாதார தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து 6%க்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்யும் என்று புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த வாரம் வெளியிடப்பட்ட டெலாய்ட் நிறுவனத்தின் அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.7% முதல் 6.9% வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டும் இதே உத்வேகம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதம் ஐ.எம்.எஃப் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.6% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப்-இன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா ஜார்ஜியேவா, உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா ஒரு முக்கிய இயந்திரமாக செயல்படுவதாக பாராட்டினார். உலகின் வளர்ச்சி 3% ஆக குறையும் நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகள் வேகம் குறைவதாகவும், இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘பொருளாதாரத்தின் நிலை’ அறிக்கை, இந்தியா உலக பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடவில்லை என்றாலும், அதன் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்று கூறுகிறது. வளர்ச்சிக்கு உதவும் முக்கிய போக்குகள்:
அதிகரிக்கும் நுகர்வு: நகரங்களிலும் கிராமங்களிலும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் தேவை மிக வலுவாக உள்ளது.
வேளாண்மையின் வளர்ச்சி: நல்ல மழைப்பொழிவு மற்றும் பயிர் சாகுபடி அதிகரிப்பால் வேளாண் துறை சிறப்பாகச் செயல்படுகிறது.
வியாபார நம்பிக்கை: உற்பத்தி துறையில் சிறிது வேகம் குறைந்தாலும், தொழிற்சாலைகள் மற்றும் சேவை துறைகள் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறையும் பணவீக்கம்: சில்லறைப் பணவீக்கம் குறைந்து வருகிறது. செப்டம்பரில் இது 1.54% ஆகக் குறைந்தது, இது கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலான மிக குறைந்த அளவாகும். மேலும், இது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4%-க்கும் கீழே உள்ளது. குறிப்பாக, உணவு பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.
இந்த நேர்மறையான கண்ணோட்டத்தின் மத்தியில், ரிசர்வ் வங்கி சில அபாயங்களையும் எச்சரித்துள்ளது:
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, அந்நிய முதலீடு குறைதல், பணக்கார நாடுகளின் கடன் ஆகிய சர்வதேச பிரச்சனைகள் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை உண்டாக்கலாம்.
சர்வதேச கொள்கைகள் நிலையாக இருந்த கடந்த காலத்தை போலன்றி, தற்போதுள்ள இந்த நிச்சயமற்ற சூழலை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் திறமையாகக் கையாள வேண்டிய அவசியம் உள்ளது.
மொத்தத்தில் அமெரிக்கா, சீன பொருளாதாரம் குறைந்து வரும் நிலையில் இந்திய பொருளாதாரம் மட்டும் உயர்ந்து வருவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான திறமையான ஆட்சி என்றே கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
