விஜயகாந்த் சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் எந்த அளவுக்கு தெரியுமோ, அதே போல அவர் சிறந்த மனிதர் என்பதுடன் அனைவரையும் ஒன்றாக பார்ப்பார் என்பதும் பலர் அறிந்த விஷயம் தான். சினிமாவில் பல தடைகளை கடந்து சாதித்த விஜயகாந்த், தான் பட்ட கஷ்டத்தை போல மற்றவர்கள் யாரும் படக்கூடாது என கருதியதுடன் சினிமாவில் அனைவரையும் சரிசமமாக நடத்தி கடைசி ஊழியன் வரைக்கும் ஒரே மாதிரி உணவையும் கொடுத்தவர் அவர் மட்டும் தான்.
அரசியலில் நுழைந்த பின்னர், விஜயகாந்தை சுற்றி நிறைய விமர்சனங்கள் உருவாகி இருந்தாலும் அவர் உடல்நிலை வலுவிழந்த பின்னர் அதிலிருந்து அவரால் மீளவே முடியாமல் காலமாகியும் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. அப்படி ஒரு சூழலில், விஜயகாந்தின் ரமணா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
போனதும் வந்த ஹார்லிக்ஸ்..
“நான் முதல் முறையாக விஜயகாந்த் சாரை அப்போது தான் பார்த்தேன். அந்த சமயத்தில் என் முன்னால் ஒரு டம்ளரை நீட்டியபடி ஒருவர் வந்தார். மோராக இருக்கும் என கருதி அதை எடுத்து பார்த்தால் ஹார்லிக்ஸ் இருந்தது. பொதுவாக ஒரு அசிஸ்டன்ட்டிற்கு மோர் தான் கொடுப்பார்கள் என நினைத்துப் பார்த்தால் ஹார்லிக்ஸ் என்றதும் ஆச்சர்யமாகி போனேன். ஒரு வேளை மற்றவர்களுக்கு வாங்கியது மீதம் இருந்ததால் எனக்கு கொடுத்தார்களா என் எதிர்பார்த்து அந்த பக்கமாக பார்த்த போது ஒரு பெரிய அண்டாவில், ஹார்லிக்ஸ் பாக்கெட்டை உடைத்து உள்ளே கொட்டிக் கொண்டே இருந்தார்கள்.
எல்லாரும் நல்லா இருக்கணும்..
எங்கள் ஊரில் யாருக்காவது காய்ச்சல் வந்தால் தான் ஹார்லிக்ஸ் கொடுப்பார்கள். சினிமா கம்பெனியில் ஹார்லிக்ஸ், இளநீர் இதெல்லாம் நான் பார்த்ததே கிடையாது. விஜயகாந்தின் இந்த குணம் பற்றி எல்லோரும் சொல்லியிருப்பார்கள். நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். இதேபோல ஒரு முறை படப்பிடிப்பு நடந்த சமயத்தில் நிறைய பேர் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார்கள். அவர்கள் சைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அங்கே வந்த விஜயகாந்த் ஏன் இவர்களுக்கு அசைவம் எதுவும் வைக்கவில்லை என கேட்க, சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளதையும் கூறினர்.

அடுத்த கணமே ஏதும் யோசிக்காத விஜயகாந்த், அவர்களுக்கெல்லாம் பக்கோடாவை உடனடியாக போடுங்கள் என கூறியதை பார்த்து நான் வியந்து போனேன். ஒரு நடிகன் தனக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே யோசிக்கும் சூழலில் படப்பிடிப்பில் இருக்கும் அனைவரும் ஒரே மாதிரியாக சாப்பிட வேண்டும், அனைவரது வயிறும் நிறைய வேண்டும் என எதிர்பார்த்தவர் விஜயகாந்த்” என முருகதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

