இஸ்ரேலின் ஜெருசலேமில் பேருந்து நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்தார்.
காசா மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் மூத்த நிபுணர் சாக்கி ஷெலோப், ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில், பிரதமர் மோடியின் அணுகுமுறையை பாராட்டியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போர் மற்றும் அமெரிக்காவின் வர்த்தக தடைகள் போன்ற முக்கியமான தருணங்களில் மோடி எடுத்த உறுதியான நிலைப்பாடு, தேசிய கௌரவம் என்பது ஒரு நாட்டின் மதிப்புமிக்க சொத்து என்பதை உலகுக்கு உணர்த்தியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை தாம் நிறுத்தியதாக பலமுறை கூறியபோதும், இந்தியா அதை மறுத்து தனது நிலைப்பாட்டை தளர்த்தவில்லை. ட்ரம்ப் நான்கு முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும், மோடி அதை நிராகரித்தது, தேசத்தின் மரியாதையை எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்ய முடியாது என்பதற்கு ஒரு சான்றாக அமைந்தது.
காசா மருத்துவமனை மீதான குண்டுவீச்சுக்கு பிறகு இஸ்ரேல் அரசு அளித்த பல்வேறு விளக்கங்கள், தலைமையின் உள்நிலை பதற்றத்தை வெளிப்படுத்துவதாக ஷெலோப் சுட்டிக்காட்டினார். இது போன்ற சூழ்நிலைகளில், பிரதமர் நெதன்யாகு, மோடியின் அணுகுமுறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எந்தவொரு அழுத்தத்தின் கீழும் தேசிய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல், உறுதியுடன் செயல்படுவது ஒரு தலைவரின் முதன்மை கடமை என்பதை மோடி உலகிற்கு நிரூபித்துள்ளார் என்றும் ஷெலோப் தெரிவித்தார்.
மோடியின் நடவடிக்கைகள், இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்ற தெளிவான செய்தியை உலகிற்கு வழங்கியுள்ளன. இது, இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்கள் பாதுகாப்பையும், தேசிய மதிப்பையும் எவ்வாறு கையாள்வது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
