ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருந்ததால், பல ஆண்டுகளாக ரஷ்யாவில் இருந்து வெளியேறி வாழ்ந்து வரும் சதுரங்க ஜாம்பவான் கேரி காஸ்பரோவ், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். புடினை “மனித இனத்தை அழிக்கும் போர்க்குற்றவாளி” என்று குறிப்பிட்டுள்ள அவர், அவரை நம்ப வேண்டாம் என மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது 50% என்ற அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி விதித்துள்ளார். அமெரிக்கா எந்த நாட்டுக்கும் விதிக்காத மிக உயர்ந்த வரி இதுதான். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “நியாயமற்றது, நியாயப்படுத்த முடியாதது மற்றும் விவேகமற்றது” என்று இந்தியா கூறியிருந்தது. ட்ரம்ப் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இந்தியா மற்றும் ரஷ்யா தங்கள் பொருளாதாரங்களை ஒன்றாக சீரழித்துக் கொண்டால் எனக்கு கவலையில்லை” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
அமெரிக்காவுடன் உறவில் ஏற்பட்ட பதற்றத்திற்கு மத்தியில், ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி பேசியதாகவும், இந்தியா-ரஷ்யா உறவை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்ததாகவும் ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, மோடியின் பதிவை மேற்கோள் காட்டி ட்வீட் செய்த காஸ்பரோவ், “உங்கள் நண்பர் விளாடிமிர் புடின்? இனப்படுகொலை செய்யும் போர்க்குற்றவாளியா? தனது சர்வாதிகாரத்தை ஒரு மணிநேரம் நீட்டிக்க உங்களையும், இந்திய தேசம் முழுவதையும் எந்நேரத்திலும் விற்றுவிடுவாரா? அப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கும்போது யாருக்கு ஜனநாயகம் தேவை? ட்ரம்ப் ஒரு கோமாளி, ஆனால் இன்னும் ஒரு சிறந்த நிலைக்கு நில்லுங்கள்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
