இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகள் என்றும் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரும் நண்பர்கள் என்றும் தற்போதைய வரி பிரச்சினையை அவர்கள் இருவரும் பேசி சரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்றும், அமெரிக்காவிலிருந்து மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார்.
ஆனால், இந்த இரண்டு கோரிக்கைகளையும் பிரதமர் மோடி நிராகரித்ததால், அமெரிக்கா இந்தியா மீது கோபம் கொண்டது. இதன் விளைவாக, இறக்குமதி பொருட்களுக்கு முதலில் 25% வரி விதித்த அமெரிக்கா, பின்னர் அதை 50% ஆக உயர்த்தியது. மேலும், அபராதம் உள்ளிட்ட கூடுதல் வரிகளையும் விதிக்கப்போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, பிரேசில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் சில நாடுகள் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியா – அமெரிக்கா வர்த்தக பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, சில முக்கியமான கருத்துகளை தெரிவித்தார்.
இந்தியா ஒரு உறுதியான கூட்டாளி:
அமெரிக்காவின் உறுதியான கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாகவும் நெதன்யாகு கூறினார். மேலும் ஆசியாவில் இந்தியா தனித்துவமான நாடு என்றும் அவர் பாராட்டினார்.
மோடி – ட்ரம்ப் நட்பு:
பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இருவரும் சிறந்த நண்பர்கள் என்றும், அவர்களுக்கு இடையே பல பொதுவான அம்சங்கள் இருப்பதால், தற்போதைய வரி பிரச்சினைக்கு அவர்களால் ஒரு தீர்வை நிச்சயம் கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா – இஸ்ரேல் கூட்டாண்மை:
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்ல கூட்டாண்மை உள்ளது என்றும், இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றி பெற இஸ்ரேலால் வழங்கப்பட்ட உபகரணங்கள் முக்கியக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
தீவிரவாத எதிர்ப்பு:
எல்லையோர பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு அதிக இந்திய தொழிலாளர்கள் தேவை என்றும், அவர்கள் மிகவும் நிலையானவர்கள் என்றும் கூறினார்.
உலக நாடுகள் இந்தியா – அமெரிக்கா நட்பு குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரின் இந்த ஆதரவான கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வரிப்பிரச்சினைக்கு பிரதமர் மோடி விரைவில் ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
