இணையவழி அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசு பொதுமக்களின் டிஜிட்டல் சாதனங்களை பாதுகாக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முக்கிய பகுதியாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘சைபர் ஸ்வச்ஸதா கேந்திரா’ என்ற திட்டத்தின் கீழ், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மற்றும் டெஸ்க்டாப்களை மால்வேர், பாட்நெட்கள் மற்றும் பிற ஆன்லைன் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க 8 முக்கியமான இலவச டூல்களை பரிந்துரைத்துள்ளது. விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்டோஸ் பயனர்களுக்கான டூல்கள்:
உங்கள் விண்டோஸ் கணினிகளில் இருந்து பாட்நெட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் மால்வேர்களை அகற்ற, அரசு மூன்று சிறந்த ஆன்டிவைரஸ் தீர்வுகளை பரிந்துரைக்கிறது:
eScan Antivirus
K7 Security
Quick Heal
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டூல்கள்:
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் பாட் அகற்றும் தீர்வுகளுக்கான அணுகல் உள்ளது. அரசு தற்போது பரிந்துரைப்பவை:
eScan Antivirus (ஆண்ட்ராய்டுக்காக)
மொபைல் சாதனங்களுக்குப் பரந்த பாதுகாப்பு அளிக்க, M-Kavach 2 செயலி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த டூல், ஸ்மார்ட்போன்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. இதில், செயலிகளை நிர்வகித்தல், திருட்டு எதிர்ப்பு அம்சங்கள், மற்றும் தீங்கிழைக்கும் செயலிகள் அல்லது இணைப்புகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவை அடங்கும். இது பயனர்கள் தங்கள் சாதனத்தின் பாதுகாப்பை எளிதாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் கட்டுப்படுத்த உதவுகிறது.
பிற அத்தியாவசிய பாதுகாப்பு டூல்கள்:
ஆன்டிவைரஸ் மென்பொருட்களை தவிர, இந்த திட்டத்தின் கீழ் மேலும் மூன்று முக்கியமான பாதுகாப்பு டூல்களும் அடங்கும்:
USB Pratirodh: அங்கீகரிக்கப்படாத USB அணுகலை கட்டுப்படுத்தவும், வெளிப்புற டிரைவ்கள் வழியாக மால்வேர் பரவுவதை தடுக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு டூல்.
AppSamvid: இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேஷன் ‘வைட்லிஸ்டிங்’ டூல். இதன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே ஒரு கணினியில் இயங்குவதை உறுதிசெய்ய முடியும்.
Browser JSGuard: இணைய உலாவலின்போது தீங்கு விளைவிக்கும் ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் சாத்தியமான பாதிப்புகளிலிருந்து பயனர்களை பாதுகாக்கும் ஒரு பிரவுசர் எக்ஸ்டென்ஷன்.
மேற்கண்ட எட்டு டூல்களையும் பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம், நாட்டின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், அனைவருக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கவும் இந்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இந்த டூல்கள் அனைத்தும் இலவசமாக பயன்படுத்தக்கூடியவை. இவற்றை சைபர் ஸ்வச்ஸதா கேந்திரா தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
