மார்கழி மாதம் என்பதற்கு வடமொழியில் மார்கசீர்ஷம் என்று சொல்வார்கள். அதாவது மார்க்கம் என்பது வழி சீர்ஷம் என்பது தலைசிறந்தது அல்லது உயர்ந்தது என்ற பொருளை தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி மாதம் இருக்கிறது என்பதையே மார்க்க சீரிஷம் எனும் சொல் நமக்கு உணர்த்துகிறது.

சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால் ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று குறிப்பிடுகிறது. இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும்.

மாதங்களில் நான் மார்கழி என பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் அமையும். அப்படி பார்க்கும் பொழுது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது.

தேவர்களுக்கான பிரம்ம முகூர்த்தம் என்பதால் இந்த மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்துவிட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.

மார்கழி மாதத்தில் தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. அதேபோல மகாவிஷ்ணுவிற்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் மார்கழியில் தான் வருகிறது. இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் மார்கழி மாதத்தில் வேறு எந்த நிகழ்வுகளையும் நடக்காமல் நம் முன்னோர்கள் பார்த்துக் கொண்டார்கள். மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் இறைவனை துதித்து இறையருளை பெறுவோம்.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

