பழைய பேருந்துகளுக்கு குட் பை.. சென்னைக்கு வரப்போகும் எலக்ட்ரிக் பஸ்.. எப்போ இருந்து தெரியுமா?

By John A

Published:

சென்னை : தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 1.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். குறுகிய பரப்பளவில் அதிகமான மக்கள் தொகை வசிப்பதால் அதிக இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது சென்னை மாநகரம். இதனால் நகரின் பரப்பளவு நாளுக்கு நாள் விரிவடைந்து சென்று கொண்டே இருக்கிறது.

மேலும் அதற்கேற்றவாறு போக்குவரத்து வசதிகளும் பெருகிக் கொண்டே வருகிறது. மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில் சேவை, மெட்ரோ சேவை, ஓலா, யூபர் போன்ற தனியார் கால்டாக்ஸிகள் இருந்தும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் மாநகரப் பேருந்துகளில் பல பேருந்துகள் பழுதடைந்து காணப்படுகிறது. எனினும் சொகுசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

AI மூலம் கஸ்டமர் சர்வீஸ்.. 600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய போன்பே நிறுவனம்..!

அண்மையில் கூட மாற்றுத் திறனாளிகளும் எளிதில் ஏறும் வகையில் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அதிநவீன வசதிகளுடன் புதிதாக சென்னையில் எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் புதிய பயண அனுபவத்தைக் கொடுக்கும் இப்பேருந்துகள் 12 மீட்டர் நீளம் கொண்டவை.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் OHM Global Mobility Pvt. Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இப்பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.