பிக் பாஸ்க்கு முன்னாடியே விஜய் டிவியின் பிரபல ஷோவில் சேர ஆசைப்பட்ட விஜய் சேதுபதி.. எந்த நிகழ்ச்சின்னு தெரியுமா..

By Ajith V

Published:

பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் அவரது இடத்தை விஜய் சேதுபதியால் நிரப்ப முடியுமா என்ற கேள்விக்கு முதல் எபிசோடிலேயே மிக பகிரங்கமாக பதில் தெரிவித்துள்ளார். 18 போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே என்ட்ரி கொடுக்க, வந்த அனைவரையுமே சிறப்பாக வரவேற்றதுடன் மட்டுமில்லாமல் அவரிடம் மிக நக்கல், நையாண்டியுடன் எந்தவித பதற்றமும் இன்றி விஜய் சேதுபதி கையாண்டிருந்த விதமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

தற்போது ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நிச்சயம் போட்டியாளர்கள் ஏதாவது தவறு செய்யும் போது அதற்கேற்ப நடவடிக்கையும் எடுப்பார் என்றே கருதப்படுகிறது. முதல் நாளில் நடிகர் சத்யா உள்ளே வந்த போதும் அவரிடம் பேசி இருந்த விஜய் சேதுபதி, நான் இப்படியே ஜாலியாக இருப்பேன் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம் என்றும் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.

இதனால் வரும் எபிசோடுகளில் நிச்சயம் விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் சேதுபதி களமிறங்க முயற்சித்த தகவல் பற்றி தற்போது அவரே சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கர் மற்றும் நடிகர் தீபக் உள்ளே வந்ததும் அவரிடம் நிறைய விஷயங்களை விஜய் சேதுபதி பகிர்ந்து கொண்டார். தீபக் ஒரு தொகுப்பாளராக மேற்கொண்ட பயணம் குறித்து கேட்ட விஜய் சேதுபதி, “நீங்களும் டிடியும் சேர்ந்து ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் முதல் சீசனை தொகுத்து வழங்கி இருந்தது மிகவும் அருமையாக இருந்தது. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வருவதற்கு நான் நிறைய நிகழ்ச்சிகளை மேற்கொண்டேன்.

ஆனால் எனக்கு அதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல இந்த நிகழ்ச்சியை நீங்களும் டிடியும் இணைந்து தொகுப்பாளர்களாக கொண்டு போயிருந்தது மிகவும் பிடித்திருந்தது” என விஜய் சேதுபதி கூறியதும் தீபக் மட்டுமில்லாமல் அங்கு இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய வியப்பாக தான் இந்த தகவல் அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தீபக்கின் நடிப்பிற்காக அவர் செய்த அர்பணிப்பு குறித்து பல்வேறு விஷயங்களையும் விஜய் சேதுபதி கேட்டு தெரிந்து கொண்டார். அதேபோல இத்தனை ஆண்டுகள் நீங்கள் சின்ன திரையில் இருந்து வருவதற்கும் தற்போது இன்ஸ்டா மூலம் பல மில்லியன் பாலோவர்களை வைத்து பிக் பாஸில் போட்டியாளர்களாக வருபவர்களையும் பார்க்கும் போது நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என விஜய் சேதுபதி கேட்க இதற்கு பதில் தெரிவித்த தீபக் “இந்த நிகழ்ச்சியில் வரும் போது அனைவருமே ஒன்றாக தான் இருப்பார்கள்” என்றும் கூறியிருந்தார்.