பூதாகரமான திருப்பதி லட்டு பிரசாதம் சர்ச்சை.. மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்தது உண்மையா..? ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விளக்கம்

By John A

Published:

திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது ஏழுமலையானும், லட்டும் தான். அந்த அளவிற்கு திருப்பதி லட்டு உலகப் பிரசித்தி பெற்றது. அதற்குக் காரணம் இந்த லட்டின் சுவை போன்று உலகில் வேறு எந்த லட்டின் சுவையும் கிடையாது என்பதுதான். மேலும் திருப்பதி லட்டு புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.

தற்போது வைணவர்களின் திருத்தலமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கு தயாரிக்கப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்ற சர்ச்சை எழுந்தது. இதனை உணவுத் தர கட்டுப்பாடு நிறுவனமும் ஆய்வு செய்து அதில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதை உறுதி செய்தது.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தற்போது ஆட்சியில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி விஸ்வரூபமாக்கியுள்ளது. தவறு செய்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும் இந்துக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகிறது.

நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளைக் கிளப்பிய லட்டு விவகாரத்தில் நெய்யில் மாட்டிறைச்சி, பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மையா என திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்றான தமிழகத்தின் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புரடெக்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

திருப்பதி திருமலை லட்டில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய்.. புதிய ஆய்வில் தெரிய வந்த உண்மை

அதில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கும் நிறுவனங்களில் நாங்களும் ஒன்று. ”எங்களிடம் தர ரீதியாக சரியான ரிப்போர்ட்டுகள் இருக்கின்றன. எங்கள் தயாரிப்பு நெய்யின் ஆய்வக முடிவுகளை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம். நாங்கள் மிகத் தரமான நெய்யைத் தான் சப்ளை செய்துள்ளோம்.

எங்களிடம் நெய்யின் தரம் குறித்த ஆய்வக முடிவுகள் உள்ளன. நாங்கள் அனுப்பிய மாதிரிகளை உணவுத் தர பாதுகாப்பு ஆய்வு நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது. எங்களுடைய நிறுவன நெய்யை எங்கு வேண்டுமானாலும் வாங்கி தாராளமாக சோதித்துப் பார்க்கலாம். எங்களுடைய நெய்யில் தரக்குறைவு உள்ளது என்பது எங்கும் நிரூபனம் ஆகவில்லை.” என்று ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் சார்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...