கானா உலகநாதனுக்கு வாய்ப்புக் கொடுத்த மிஷ்கின்.. பாடி, நடிக்க வைத்தது எப்படி தெரியுமா?

By John A

Published:

தமிழ் சினிமாவில் கானா பாடலை முதன் முதலாக அறிமுகப்படுத்தி அதனை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமை இசையமைப்பாளர் தேவாவிற்கு உண்டு. ஆனால் அதற்கு முன்பே கானா பாடல்கள் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாடி வந்தாலும் அதற்கு முறையான அடையாளம் கொடுத்து ரசிக்க வைத்தார் தேவா. இதனையடுத்து கானா பாடல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் பெருகியது. தொடர்ந்து பல கானா பாடகர்கள் உருவாகினர். மேலும் பாடிக்கொண்டிருந்த பலர் வெளிச்சத்திற்கு வந்தவர். அப்படி கானா பாடல்கள் மூலம் பிரபலமானவர் தான் பாடகர் கானா உலகநாதன்.

சென்னையைச் சேர்ந்த கானா உலகநாதனை மேடைக் கச்சேரிகளிலும், கோவில் விழாக்களிலும் கானா, பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். ஒருமுறை இவருக்கு இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கிய ஜித்தன் படத்தில் ஆ.. முதல் ஃ தானாடா பாடல் பாட வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு காலையிலேயே வந்தவர் மாலை 6மணிவரை பாடல் ஒலிப்பதிவு நடைபெறவில்லை.

எனவே அன்றைய தினம் தான் பாடவிருந்த மற்றொரு மேடைக் கச்சேரிக்காக சொல்லாமல் சென்று விட்டார் கானா உலகநாதன். அங்கு வின்சென்ட் செல்வாவின் உதவியாளராக இருந்தவர் தான் சண்முக நாதன் என்ற இயக்குநர் மிஷ்கின். கானா உலகநாதனைப் பார்த்த மிஷ்கின் தான் முதன் முதலாக இயக்கப் போகும் படத்தில் இவரையும் ஒரு பாடல் பாட வைப்பதற்காக அணுகியிருக்கிறார்.

முருகன் பக்திப் பாடலில் இடம்பெற்ற ஆண்டாள் பாசுரம்.. கவிஞர் செம கில்லாடியா இருப்பார் போலயே…

கானா உலகநாதானும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டு வாள மீனுக்கும்.. விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலைப் பாடிக் கொடுத்திருக்கிறார். இந்தப் பாடல் பதிவின் போது கானா உலகநாதனின் மேனரிஸங்களைப் பார்த்த மிஷ்கின் ஷுட்டிங்கின்போது அவரையே இந்தப் பாடலில்நடிக்கச் சொல்லியிருக்கிறார். தனது நடிப்பு வராது எனக் கூறிய போது தான் கூறியவற்றை மட்டும் செய்யுங்கள் என்று ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் கையை அசைத்துப் பாடிய அதே ஸ்டைலை சொல்ல கானா உலகநாதன் அதை அப்படியே செய்திருக்கிறார்.

இந்தப் பாடல் பதிவின் போது இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு கானா பாடல் தனக்கு சரியாக வராது என்று கூற, கானா உலகநாதனே அதற்குரிய இசைக்கருவிகள் மற்றும் பாடும் முறையை அவருக்கும் சொல்லி இந்தப் பாடலைப் பதிவு செய்திருக்கிறார்கள். படம் வெளியாகி இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எந்தச் சேனலைத் திருப்பினாலும் இந்தப் பாடலே ஒலித்தது. தொடர்ந்து கானா உலகநாதனுக்கு வாய்ப்புகள் குவிய அடுத்தடுத்து சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி வருகிறார்.