காஞ்சிபுரத்தில் இந்த ஐந்து படிக்கட்டுக்கு 11 லட்சமா? வீடியோ போட்ட அனிதா சம்பத்.. வந்து விழுந்த பதிலடி

By Keerthana

Published:

சென்னை: பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் திரைப்படங்களிலும், சீரியல்களிலும்  நடித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம்  குன்றத்தூர் அருகில் அமைந்துள்ள ஒரு குளத்திற்கு நடைபாதை மற்றும் படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக 11 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருந்தை விமர்சித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதற்காக அவர்  தற்போது கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் பிரபலமான அவர், தற்போது, டிவி, திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் தைரியமாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் ஆம்ஸ்ட்ராங் மறைவின் போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று விமர்சித்து வீடியோ வெளியிட்டார்.  அடுத்ததாக குளக்கரை நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம்  மாங்காடு பக்கத்தில் உள்ள கொழுமணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்திற்கு நடைபாதை, படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக 11.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு ஒரு சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது. இதை குறிப்பிட்டு அனிதா சம்பத்,  இந்த படிக்கட்டுகளை கட்டுவதற்காக 11 லட்சமா? 12 லட்சத்தில் முழு வீடே கட்டலாமே என்று கேள்வி எழுப்பி அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். இதற்கு அதிகமானோர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதேநேரம் சிலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

ஒரு  சிலர் எங்க ஊரிலும் இப்படித்தான் சின்டெக்ஸ் டேங்க் மட்டும் வைத்துவிட்டு அதற்கு லட்சக்கணக்கை எழுதி விடுகிறார்கள் என்று அனிதா சம்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு சிலர் அக்காவுக்கு சற்று தெளிவு தேவை என்று விமர்சித்து உள்ளார்கள்.

 

நீங்கள் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்துவிட்டு இப்படி பேசுவது சரியல்ல என்றும் நடைபாதை படிக்கட்டு அந்த குளத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் மின் விளக்குகள் மற்றும் அதற்கான பராமரிப்பு செலவு, அதுபோல நீங்கள் நின்று கொண்டிருக்கும் இன்டர் லாக் போடப்பட்ட நடைபாதையும் சேர்த்துதான் அவ்வளவு தொகை அதில் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.