வீட்டுகே வரப்போகும் ஆபிசர்ஸ்.. இது இல்லாட்டி.. பில்டிக் அப்ரூவல் உடனே ரத்தாகும்

By Keerthana

Published:

சென்னை: சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் 4 விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், வழங்கப்பட்ட கட்டிட வரைப்பட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறும் வகையில் சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறையை கொண்டு வரப்பட்டுள்ளத. இந்த திட்டத்தின் படி, தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டிட அனுமதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இந்த சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெறும் போது, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். அதில் 4 முக்கிய விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

நான்கு விதிமுறைகள் விவரம்: சுயசான்றிதழ் அடிப்படையில் அனுமதி பெறப்பட்ட கட்டிடங்களுக்கான நில உரிமையினை, அனுமதி வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் நகரமைப்பு பிரிவால் 100 சதவீதம் சரிபார்க்கப்பட வேண்டும்.

வருவாய் பிரிவினர் 30 நாட்களுக்குள் காலிமனை வரியினை வசூல் செய்ய வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்பு தொகையை பொறியியல் பிரிவினர் 30 நாட்களுக்குள் வசூலிக்க வேண்டும்.

இந்த கட்டுமானங்கள் 2,500 சதுரடி மனையில் 3,500 சதுரடி பரப்பளவு கொண்ட தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்கு உட்பட்ட கட்டுமானம் என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த 4 விதிகளில் குறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினர் நகரமைப்பு பிரிவிற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் கட்டிட வரைப்பட அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.