பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. டாஸ்மாக் நிறுவனம் எடுத்த மேஜர் முடிவு.. நல்ல செய்தி

By Keerthana

Published:

சென்னை: மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்கள் கண்ணாடி பாட்டில்கள் என்பதால் வனஉயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது நடந்து வந்தது. இதையடுத்து மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. அதன்படி, பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்முறையில் உள்ளது.

இந்த பாட்டில் திரும்ப பெறும் திட்டம் மலை பகுதிகளை தாண்டி, திருப்பூர், கோவை உள்பட 10 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது காலி மது பாட்டில்களை திரும்ப கொடுத்தால் 10 ரூபாய் தரப்படுகிறது. இந்நிலையில் வனப் பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களை தூய்மையாக வைக்க இந்த திட்டம் உதவியது. பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்த முறை பயன்படுவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றனர். அரசுக்கும் இந்த திட்டத்தால் பெரிய வருவாய் கிடைத்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த போது, டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தனர்.

இதனிடையே அகில இந்திய பாட்டில் வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், மது பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரில் தங்களையும் இணைக்க வேண்டும், டெண்டரில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டரில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ஆன்லைன் டெண்டர் முறை பின்பற்றப்படுவதாக கூறினார்.

பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பாட்டில் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே டெண்டர் ஒதுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆணையர் அறிவுறுத்தியுள்ளது. எனவே பழைய டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.தற்போது 10 மாவட்டங்களில் பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், 2024 செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனறு கூறினார்.

அப்போது திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தில் கூறினாரக்ள். அப்போது நீதிபதிகள், தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன? என கேள்வி எழுப்பினர். அதற்கு டாஸ்மாக் தரப்பு, சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக விளக்கம் அளித்தது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பழைய டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரருக்கு குறைகள் இருந்தால் அரசுக்கு மனு அளிக்கலாம் என்றனர். மேலும், புதிய டெண்டர் அறிவிப்பு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.