இப்படியா தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாடுவீங்க.. சிறுவன் கையில் பற்றிய தீ.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

By John A

Published:

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் 50-வது பிறந்த நாள் இன்று தமிழகமெங்கும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை தவெக சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இசிஆர் சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.

விழா நடந்து கொண்டிருந்த போது ஒரு சிறுவனின் சாகச நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கராத்தே பயிலும் மாணவரான அவர் கையில் நெருப்புடன் ஓடுகளை அடித்து உடைக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கையில் நெருப்பினை பற்ற வைத்து அவர் ஓடுகளை உடைத்து முடித்த பின் தீயை அணைக்க முற்பட்ட போது அது அணையவில்லை.

எதிர்பாரா விதமாக உடம்பில் பற்றிக் கொண்டது. மேலும் அருகில் பெட்ரோல் கேனுடன் நின்றிருந்தவர் செய்வதறியாது திகைத்து சிறுவனைக் காப்பாற்ற கையில் பெட்ரோல் கேனுடன் ஓட பெட்ரோல் சிந்தி கீழேயும் தீ பரவியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் கூடி தீயை அணைத்தனர்.

5 முறை அடுத்தடுத்து அறுந்த தேர்வடம்.. நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் நடந்தது இதான்.. அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணி நேர ஓய்வுக்குப்பின் சிறுவன் மீண்டும் நலமுடன் வந்தார். இந்த விபத்து பற்றி சிறுவன் கூறும் போது, நான் ஏழாம்வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை 15க்கும் மேற்பட்ட உலக சாதனைகளைச் செய்துள்ளேன். இதுபோன்ற முயற்சிகள் செய்யும் போது சில விபத்துகள் நடப்பது சகஜம் தான். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. கொஞ்சம் ஸ்பார்க் ஆகி விட்டது. I Will come back என்று கூலாகக் கூறினார்.

பிறந்தநாள் கொண்டாடலாம். அதற்காக இப்படியா பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாகசங்கள் செய்வது. என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நெட்டிசன்களும், பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.