முரளிக்கு தன் குரலில் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த இசைஞானி..இவ்ளோ ஹிட் லிஸ்ட்டா?

By John A

Published:

இசையில் யாராலும் தொட முடியாத இடத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் அந்தக் காலகட்டத்திலும் அதே பொலிவுடனும், ரசனையோடு இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இசைஞானி என்ற பட்டம் அவருக்குச் சும்மா வந்துவிடவில்லை. கேட்கும் இசையில் ஒரு தனித்துவமும், மண்ணின் மணமும், உணர்வுகளைத் தூண்டி அந்தக் காட்சிக்கு ஏற்ற மனநிலையையும் இளையராஜாவின் இசை மட்டுமே செய்யும் மாயாஜாலம்.

இப்படி இசையில் உச்சம் தொட முடியாத இளையராஜா பாடகராகவும் நூற்றுக்கணக்கான திரையிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். இவரது குரல் நவரச நாயகன் கார்த்திக்கு அச்சு அசலாகப் பொருந்துவது போல மற்றொரு நடிகருக்கும் பொருந்தும். அவர்தான் புரட்சிநாயகன் முரளி. அமைதியான நடிப்பால் அனைவரையும் கவரும் முரளிக்கு இசைஞானியின் பல பாடல்கள் ஹிட் கொடுத்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக அவர் பாடிய பாடல்களே அப்படியே முரளியே பாடுவது போல் தோன்றும் அளவிற்கு பொருந்திப் போகும். அதில் குறிப்பிட்ட சில பாடல்களைப் பார்ப்போம்.

பகல்நிலவு படத்தில் பூமாலை தோள் சேரவா பாடலைக் கேட்காதவர்கள் யாரும் கிடையாது. மணிரத்னத்தின் முதலாவது தமிழ்ப் படம். இப்பாடல் இளையராஜாவின் இசையில் அவரே பாடியது. அதிலும் பாடலில் முதலில் வரும் வயலின் இசை ரசிகர்களைக் கிறங்க வைக்கும். எஸ். ஜானகியின் குரலும் இந்தப் பாடலுக்கு கூடுதல் சுவை சேர்க்கும். அடுத்ததாக இதே படத்தில் இடம்பெற்ற மைனா மைனா மாமன் புடிச்ச மைனா.. பாடலும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அடுத்த படமான பூவிலங்கு படத்தில் இடம்பெற்ற ஆத்தாடி பாவாட காத்தாட பாடல் இன்னும் டிரண்டிங்கில் இருக்கும் பாடல். முரளி, குயலியின் நடிப்பும், இளையராஜாவின் குரலும் மெய்மறக்கச் செய்து காதுகளுக்கு இன்னிசையை அள்ளி ஊற்றும் பாடலாக விளங்குகிறது.

மௌனம் காத்த இசைஞானி.. சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குநர்கள்.. அடுத்து இளையராஜா செஞ்ச தரமான சம்பவம்

பொதுவாக முரளி என்றாலே சோகத்தை இவர் போல் யாராலும் கொண்டு வர முடியாத அளவிற்கு நடிப்பில் பிரமாதப்படுத்துவார். அப்படி உருவான காதல் சோகப் பாடல்தான் ஒரு ஜீவன் அழைத்தது பாடல்.. கீதாஞ்சலி படத்தில் காதல் சோகத்தில் இசையிலும், குரலிலும் உருக வைத்திருப்பார் இசைஞானி. இந்தப் பாடல் முரளிக்கு அழியாப் புகழைப் பெற்றுக் கொடுத்த பாடலாகும். அதே படத்தில் இடம்பெற்ற துள்ளி எழுந்தது பாட்டு… பாடலும் கிட்டாரில் உருவான அற்புத பாடல். இதில் நளினியுடன், முரளி நடனமே இல்லாமல் முகபாவனைகளில் கலக்கியிருப்பர். மேலும் மலேரே பேசு மௌன மொழி பாடலும் ஹிட் ரகமே..!

அடுத்ததாக பூமணி படத்தில் இடம்பெற்ற என்பாட்டு என்பாட்டு என்ற பாடல் கேட்டாலே அழவைக்கும் மந்திர கானம். இந்தப் பாடலுக்கு உருகாதவர் பிறவிப் பயனை எய்த மாட்டார் என்பதே உண்மை. அந்த அளவிற்கு ஆழமான ஒரு சோகத்தை ஏற்படுத்தும் பாடல். சாமி போட்ட முடிச்சு படத்தில் இடம்பெறும் மாதுளங்கனியே நல்ல மலர்வனக்குயிலே பாடல் சூப்பர் ஜோடிப் பாடல். இன்றும் திருமண வீடுகளில் தவறாமல் ஒலிக்கும் இனிய கானம். இவ்வாறு முரளிக்கும், நவரச நாயகன் கார்த்திக்கும் இளையராஜாவின் குரல் அப்படியே பொருந்திப் போகும்.