மௌனம் காத்த இசைஞானி.. சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குநர்கள்.. அடுத்து இளையராஜா செஞ்ச தரமான சம்பவம்

By John A

Published:

இசைஞானி இளையராஜா தனது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து வந்திருக்கிறார். 80-களின் காலகட்டத்தில் இளையராஜாவின் இசையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே சொக்கிப் போய் இருந்தது. இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தவமாய் இளையராஜாவின் ஸ்டுடியோவில் காத்துக் கிடந்த சம்பவங்களும் ஏராளம்.

அதே நேரத்தில் புது முக இயக்குநர்களுக்கும் இளையராஜா தனது இசையால் பாடல்களைக் ஹிட்டாக்கி அவர்களை முன்னனி இயக்குநர்கள் வரிசையில் இணைய வைத்தார். நடிகர்கள் மோகன், ராமராஜன் போன்றோர் இளையராஜாவின் பாடல்களாலேயே புகழ்பெற்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அப்படிபட்ட இசைஞானி புதுமுக இயக்குநர்கள் இயக்கிய ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. அப்படி இளையராஜா சம்பளமே வாங்காமல் இசையமைத்த திரைப்படம் தான் பன்னீர் புஷ்பங்கள். இயக்குநர்களாக பி.வாசுவும், சந்தான பாரதியும் முதன் முதலாக அறிமுகமான திரைப்படம்.

மேலும் நடிகர் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா போன்றோரும் இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாயினர். புதுமை இயக்குநர் ஸ்ரீதரிடம் இணை இயக்குநர்களாகப் பணியாற்றி சந்தான பாரதியும், பி.வாசுவும் இணைந்து பாரதி வாசு எனப் பெயரை மாற்றி இப்படத்தினை இயக்கினார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

அதற்கு முக்கியக் காரணம் இளையராஜாவின் இசை. பன்னீர் புஷ்பங்கள் படத்திற்காக மொத்த பட்ஜெட் ரூ.5லட்சம். ஆனால் 80-களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் சம்பளமே ஒருலட்சத்தைத் தொட்டிருந்தது. அவர் ஒரு லட்சம் சம்பளம் பெற்ற படம் மீண்டும் கோகிலா. மிகவும் பிஸியாக இருந்த காலகட்டம் அது.

50 முறை எம்.ஜி.ஆர் பாட்டைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி.. உடனடியாக எம்.எஸ்.வி-க்குப் பறந்த தகவல்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்

இந்நிலையில் பன்னீர்புஷ்பங்கள் கதையைக் கேட்ட இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டார். ஆனால் சம்பளத்தைக் கூற வில்லை. படத்தின் பட்ஜெட்டே 5 லட்சம் தான். இவருக்கு சம்பளமே 1 லட்சம் என்றால் என்ன செய்வது என்று இயக்குநர்கள் வாசுவும், சந்தான பாரதியும் கையைப் பிசைந்து கொண்டிருக்க, சம்பள விஷயத்தைப் பற்றி எதுவும் பேசாமல் இளையராஜா இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரீ-ரிக்கார்டிங் வரை வந்து விட்டது. அப்போதும் இளையராஜா சம்பளத்தைப் பற்றி வாயைத் திறக்கவில்லை. இதற்கு மேலும் பொறுக்க முடியாது என நினைத்து வாசுவும், சந்தானபாரதியும் இளையராஜாவிடம் சம்பளம் பற்றிக் கேட்க, இந்தப் படத்திற்கு எனக்குச் சம்பளம் வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். இருவருக்கும் ஆச்சர்யம். நீங்கள் இயக்குநர் ஸ்ரீதரின் மாணவர்கள். எனவே அவர் என்னிடம் கூறிவிட்டார். உங்களை வெற்றிகரமான இயக்குநராக்குவது எனது பணி. எனவே இந்தப் படத்திற்கு எனக்குச் சம்பளம் வேண்டாம் என்று கூறி அவர்களை நெகிழ வைத்திருக்கிறார்.

பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக ஆனந்தராகம் கேட்கும் காலம், பூந்தளிர் ஆட.. போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்கள்..