வேண்டாம் எனச் சொல்லிய தயாரிப்பாளர்.. அடம்பிடித்த ஹீரோ.. உருவான நேசமணி

By John A

Published:

ஒரு சினிமா கதாபாத்திரத்திற்காக நிஜமாகவே வருத்தப்படுவது போல் Pray for Nesamani என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்தியா முழுக்க பிரபலப்படுத்தி சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆனது நம் வடிவேலுவாகத்தான் இருக்க முடியும். இன்றோடு இந்த ஹேஷ்டேக் உருவாக்கி 5 வருடம் ஆனது. இப்படி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் காமெடியைப் பார்க்காதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

மறைந்த மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் பிரண்ட்ஸ். வடிவேலுவின் காமெடிக்காகவே படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது. ப்ரண்ட்ஸ் திரைப்படம் முதலில் மலையாளத்தில்தான் வெளிவந்தது. ஜெயராம், முகேஷ், ஸ்ரீனிவாசன் மற்றும் ஜெகத ஸ்ரீகுமார் ஆகியோர் தமிழ் ரீமேக்கில் விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா, வடிவேலு ஆகிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வடிவேலு கதபாத்திரத்தில் நடித்த ஜெகதியின் தலையில் சுத்தியல் விழும் காட்சிக்குத் தான் தியேட்டரே அதிர்ந்திருக்கிறது.

முன்னதாக தயாரிப்பாளர் படத்தின் செலவுகளைக் குறைக்கச் சொல்லியதால் இயக்குநர் சித்திக் இந்தக் காட்சிகளை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டாராம். இதற்கு முன்னர் இந்தக் காட்சி எடுப்பதற்காக டம்மி சுத்தியலைத் தயார் செய்து வைத்திருந்தார்களாம். ஆனால் இந்தக் காட்சி எடுக்கப் போவதில்லை என அறிந்து வருத்தமுற்றிருக்கிறார்கள். இதனை அறிந்த ஒரிஜினல் பிரண்ட்ஸ் பட ஹீரோவான ஜெயராம் உடனே இயக்குநரிடம்பேசி இந்தக் காட்சி மிகச் சிறப்பாக வரும் எப்படியாவது வைக்க வேண்டும்என அன்புக் கட்டளை போட்டிருக்கிறார்.

அதன்படி வெறும் மலையாளத்தில் அரைநாளில் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. இப்படித்தான் இந்த நேசமணி கதாபாத்திரம் கதைக்குள் வந்தருக்கிறது. மலையாளத்தில் ஜெகதி நடித்த கதாபாத்திரத்தை தமிழில் வடிவேலு நடிக்க இருக்கிறார் என்பதை அறிந்த இளையராஜா இயக்குநர் சித்திக்கிடம் வடிவேலுவை ஜெகதியின் நடிப்பினை ஒருமுறை பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி வடிவேலுவும் ஜெகதியின் நடிப்பினைப் பார்த்து அதைவிட பல மடங்கு கூடுதலாக தனது பங்களிப்பை அளித்திருக்கிறார்.

இந்தக் காட்சி எடுக்கும் போது தளபதி விஜய்க்கு சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாதததால் வேறு வழியின்றி அவரின் முதுகு மட்டுமே இந்தக் காட்சியில் தெரியுமாறு இயக்குநர் சித்திக் பார்த்துக் கொண்டார்.