சரத்குமாரின் சூப்பர் ஹிட் படமான மாயி பட இயக்குநர் மறைவு.. திரையுலகிலகினர் அஞ்சலி..

By John A

Published:

நடிகர் சரத்குமாரின் மாயி படத்தினை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறக்க முடியாது. படத்தின் கதை நினைவில்லை என்றாலும் வடிவேலுவின் காமெடி என்றென்றும் நினைவில் இருக்கும். வாம்மா.. மின்னல் என்ற ஒற்றை வசனத்தில் வரும் காமெடியை இன்றவும் பெண்களை கலாய்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வசனமாக உள்ளது. இந்தப் படத்தினை இயக்கியவர் சூர்ய பிரகாஷ். நடிகர் ராஜ்கிரணை வைத்து 1996-ல் மாணிக்கம் என்ற படத்தினை இயக்கினார்.

இதனையடுத்து பிரபு ஹீரோவாக நடித்த பெண் ஒன்று படத்தினை இயக்கிய நிலையில் அடுத்து சரத்குமார் நடித்த மாயி படத்தினையும் இயக்கினார். இந்தப் படம் அவருக்கு நல்ல அடையாளத்தினைக் கொடுத்தது.மாயி பட வெற்றியால் மீண்டும் சரத்குமாருடன் இணைந்து திவான் என்ற படத்தினையும் இயக்கினார் சூர்யபிரகாஷ். இந்தப் படமும் பரவலான வெற்றியைப் பெற்றது. அதன்பின் திரையுலகில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தவர் ஜீவன் நடித்த அதிபர் படத்தினை இயக்கினார். 2015-ல் கடைசியாக வருசநாடு என்ற படத்தினை இயக்கினார்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிப்பு அரக்கன் பட்டம் வழங்கிய மாநாடு.. இந்தக் கதாபாத்திரத்துல நடிக்க இருந்தது இத்தனை நடிகர்களா?

இவ்வாறு தமிழ் சினிமாவில் சில படங்களை இயக்கிய இயக்குநர் சூர்யபிரகாஷ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இதனை நடிகர் சரத்குமார் தனது டிவிட்டர் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,“எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திரையுலகினர் பலரும் இயக்குநர் சூர்யபிரகாஷ் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். மாயி, திவான் படங்களில் வடிவேலுவின் மறக்க முடியாத காமெடியை உருவாக்கியவர் இன்று இவ்வுலக வாழ்வை விட்டுச் சென்றுள்ளார். எனினும் அவரது படைப்புகள் அவரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.