அப்படியே ரோஹித் மாதிரி.. ஐபிஎல் கேப்டனாக சூப்பர் லிஸ்ட்டில் இடம்பிடித்த ஷ்ரேயஸ் ஐயர்..

By Ajith V

Published:

17 வது ஐபிஎல் தொடர் இப்போது தான் களைகட்டி உள்ளது என்று சொல்லும் அளவுக்கு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் பாதி லீக் போட்டிகளில் அசத்தலாக ஆடி முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில் தான், திடீரென இரண்டாம் பாதி அவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

தொடர்ந்து நான்கு போட்டிகள் தோல்வி அடைந்து வந்துள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மிச்சம் இருக்கும் நிலையில், அதில் வெற்றி பெற்றாலும் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்கும் நிலை தான் அவர்களுக்கு உருவாகி உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு அவர்கள் முன்னேறி விட்டாலும் இதே ஃபார்மில் இருந்தால் குவாலிஃபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் கடினமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு இடங்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி உருவாகும் என்றும் தெரிகிறது. இந்த மூன்று அணிகளும் மீதமுள்ள போட்டிகளில் வென்றாக வேண்டும் என்ற சூழலில், சென்னை மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் ஒரு போட்டியில் 18 ஆம் தேதியன்று மோதுகிறது.

இப்படி அடுத்தடுத்த போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில் தான், இந்த சீசனில் மிகச் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில், கவுதம் கம்பீர் மென்டராக செயல்பட்டு வரும் கொல்கத்தா அணியில் ஆடும் 11 வீரர்களும் டாப் ஃபார்மில் இருந்து வருகின்றனர்.

இதே பார்ம் பிளே ஆப் சுற்றிலும் தொடரும் பட்சத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறி ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை அல்லது பெங்களூரு என எந்த அணிகள் வந்தாலும் நிச்சயம் கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் போட்டிகளில் கடுமையான சவால் இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் அசத்தலான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் இந்த முறை தான் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை கொல்கத்தா அணி பிடித்துள்ளது. இந்த பெருமையை ஷ்ரேயஸ் ஐயர் முதல் கேப்டனாக படைத்துள்ள நிலையில், மற்றொரு மோசமான சாதனையும் அவர் பக்கம் உள்ளது.

ஒரு அணியின் கேப்டனாக, புள்ளிப் பட்டியலில் முதலிடம் மற்றும் கடைசி இடம் பிடித்த கேப்டன்கள் வரிசையில், சேவாக், ஜார்ஜ் பெய்லி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக தற்போது ஷ்ரேயஸ் ஐயர் இடம்பிடித்துள்ளார். இவரது தலைமையில், டெல்லி அணி 2018 ஆம் ஆண்டு கடைசி இடத்தை பிடிக்க, தற்போது கொல்கத்தா அணி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.