ரிஷபம் வைகாசி மாத ராசி பலன் 2024!

By Gayathri A

Published:

ரிஷப ராசி அன்பர்களே! வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை லக்கினத்திலேயே சூர்ய பகவான் இட அமர்வு செய்துள்ளார். சுக்கிர பகவான் வீட்டில் இருக்கும் சூர்யனால் பெண் வீட்டார்மூலம் நிறைய நன்மைகள் உங்களை வந்து சேரும்.

ஆளுமைத் திறன் கொண்ட மனிதராக நீங்கள் இருப்பீர்கள்; எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்துப் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். நீங்கள் எடுத்துச் செயல்படுத்தும் காரியங்கள் மிகவும் வலிமையான காரியங்களாகவே இருக்கும். லக்கினத்தில் சூர்ய பகவான் அமர்வதால் ஏற்கனவே இருக்கும் உடல் தொந்தரவுகளில் இருந்து மீண்டு உடல் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

ரிஷப ராசியின்மீது சூர்யன் வருவதால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் தரும் பல விஷயங்கள் நடக்கப் பெறும். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பகவானுடன் சுக்கிர பகவான் கூட்டணி அமைத்து இட அமர்வு செய்கின்றனர். செவ்வாய்- சுக்கிரன் கூட்டணியால் நீங்கள் புதியதாக வண்டி, வாகனங்கள் வாங்கச் செய்வீர்கள்.

இந்த வைகாசி மாதத்தில் அதிக அளவிலான பயணங்களைச் செய்வீர்கள். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உடன் பிறப்புகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்; சிறு சிறு பிரச்சினைகளும் பிளவுக்கு இட்டுச் செல்லும். வார்த்தைகளில் கவனம் தேவை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

வீடு, மனை போன்றவற்றினை விற்க நினைப்போர் தாராளமாக விற்பனை செய்யலாம். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லாபம் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மிகவும் யோகமான காலகட்டமாக இது இருப்பதால் நீங்கள் மிகச் சிறப்பாகத் திட்டம் தீட்டி வெற்றி இலக்கினை அடைவீர்கள்; உங்களின் தன்னம்பிக்கையானது பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவீர்கள்.

விபரீத தைரியம் உண்டு, அபார மன மகிழ்ச்சி உண்டு. பொருள் சேர்க்கையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பூர்விகச் சொத்துகளை விற்று சிறப்பான முதலீடு செய்ய ஏற்ற காலகட்டமாகும்.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் அனுகூலங்கள் ஏற்படும்.