அரண்மனை 4 விமர்சனம்.. தமன்னா தாறுமாறு!.. ஆனால் சுந்தர்.சி அந்த விஷயத்தை கோட்டை விட்டுட்டாரே?..

By Sarath

Published:

Aranmanai 4 Review: சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா, கேஜிஎஃப் வில்லன் ராமச்சந்திரா ராஜு, சந்தோஷ் பிரதாப், கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா, மறைந்த லொள்ளுசபா சேசு, விடிவி கணேஷ் மற்றும் சுந்தர் சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

அரண்மனை 4 விமர்சனம்: 

அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் சொதப்பிய நிலையில், தைரியமாக நான்காம் பாகத்தை சுந்தர் சி இயக்கியதற்கே பாராட்டுக்களை தெரிவிக்கலாம். எப்படியாவது மீண்டும் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்தார் சுந்தர்.சி கடும் உழைப்பை போட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.

வழக்கறிஞராக வரும் சுந்தர். சிக்கு தங்கையாக இந்த படத்தில் தமன்னா நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப்பை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தமன்னாவுக்கும் சுந்தர். சி குடும்பத்துக்கும் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறது.

10 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் தமன்னா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அவரது கணவர் சந்தோஷப்பட்டார் ஜாகிங் போகும்போது விபத்து ஏற்பட்டு மரணிக்கிறார். இந்த விஷயம் சுந்தர். சிக்கு தெரிய வரும் நிலையில் தங்கை வாழ்க்கை என்ன ஆனது மேலும், தங்கையின் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டுமே என்கிற நோக்கில் அவரைத் தேடி போகும்போது அமானுஷ்ய விஷயங்கள் காரணமாக சுந்தர் சி யின் தங்கை தமன்னா உயிரிழந்த விஷயம் சுந்தர் சிக்கு தெரிய வருகிறது. மேலும், தமன்னாவின் குழந்தையையும் கொல்ல வந்த அமானுஷ்ய சக்தி துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சுந்தர் சி தனது தங்கையின் 10 வயசு குழந்தையை காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.

சிஜி மற்றும் ஹாரர் காட்சிகள் மிரட்டல்:

இதற்கு முன் வெளியான அரண்மனை படங்களை விட இந்த படத்துக்கு கதை, திரைக்கதையை சிறப்பாக எழுதியுள்ளார் சுந்தர் சி. தமன்னாவின் நடிப்பு, சிஜி காட்சிகள் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு சென்று டேய் செய்யும் அட்டகாசங்கள் என அனைத்தும் மற்ற பாகங்களை விட சிறப்பாகவே உள்ளன.

காமெடி காட்சிகளை பொருத்தவரை கோவை சரளா மற்றும் சேசு காமெடி காட்சிகள் அமர்க்களமாக உள்ளன. யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் பல இடங்களில் சொதப்பினாலும் இரண்டாம் பாதியில் வரும் ஒரு இடத்தில் பயங்கரமாக ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர்.

ஆனாலும், படம் ஆன் அண்ட் ஆஃப் ஆகவே செல்கிறது. ஒரு சீன் நல்லா இருந்தா அடுத்த சீன் மொக்கையாக உள்ளது. மேலும், பல ஹாலிவுட் பேய் படங்களில் இருந்து சுந்தர். சி காட்சிகளை சுட்டு வைத்திருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது. அதையெல்லாம் சரி செய்திருந்தால் பிளாக்பஸ்டர் படமாகவே மாறியிருக்கும். ஆனாலும், இந்த ஆண்டு வெளியான படங்களுக்கு இது பரவாயில்லை ரகம் தான். அரண்மனை 3 படங்களை பார்த்த ரசிகர்களுக்கு 4ம் பாகம் நல்ல படமாகவே தெரியும்.

அரண்மனை 4 – அமர்க்களம்!
ரேட்டிங் – 3.5/5