பொழுதுபோக்கு

பையன் நல்லா நடிப்பானா? கேள்வி கேட்ட பானுமதிக்கு நடிப்பால் பதிலடி கொடுத்த நடிகர் திலகம்..

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு முன்னோடி நடிகைதான் பழம்பெரும் நடிகை பானுமதி. அந்தக் காலத்தில் இவருடன் இணைந்து நடிக்கவே அனைவரும் பயப்படுவார்களாம். மிகவும் கண்டிப்பானவராம். நடிப்பு என்று வந்து விட்டால் அருகில் இருக்கும் அனைவரையும் ஓவர்டேக் செய்து விடுவாராம். இவரது கறார் குணத்தால் ஷுட்டிங்கில் சில சண்டைகளும் நடந்துள்ளது.

நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டு  நடிப்பு அரசியாகத் திகழ்ந்த பானுமதி முதன்முதலாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இணைந்த படம்தான் கள்வனின் காதலி. பானுமதியோ சீனியர் நடிகை. கதாநாயகர்கள் அவரை தொட்டு நடிக்கக் கூட பயப்படுவார்கள். அவர் பெர்மிஷன் இல்லாமல் அவரை நெருங்கக் கூட முடியாது.

அப்படிப்பட்ட சீனியருடன் நடிக்க ‘கள்வனின் காதலி’யில் நம்மவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஷூட்டிங் நடக்கத் தொடங்கியது. பானுமதி 1939-இல் திரையலகில் களமிறங்கியவர். ஆனால் நடிகர் திலகமோ 1952 இல் சினிமாவில் அறிமுகமானவர். கிட்டத் தட்ட 13 வருடங்கள் பானுமதி சிவாஜி கணேசனுக்குச் சீனியர்.

கள்வனின் காதலி பட ஆரம்ப ஷூட்டிங்கின் போது, பானுமதி இயக்குனர் வி.எஸ் ராகவனிடம் சிவாஜியைப் பற்றி கேட்டு “பையன் எப்படி… நன்றாக நடிப்பானா… எனக்கு சமமாக நடிக்க வேண்டுமே!” என்றாராம். ஆனால் நடிகர் திலகம் வழக்கம் போல கள்வனின் காதலியில் நடிப்பில் அசத்தி விட, பானுமதி சிவாஜியின் நடிப்பில் மிரண்டு, அரண்டு போய் இயக்குனரை சில நாட்களுக்குள்ளேயே தனியே அழைத்து “அந்தப் பையனை (நடிகர் திலகத்தை) கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்… விட்டால் என்னையே காணாமல் காலி செய்து விடுவான் போல இருக்கிறது” என்றாராம்.

சேரனுக்கும் வைரமுத்துவுக்கும் வந்த சண்டை.. இடையில் கிடாவெட்டி சூப்பர் ஹிட் பாடல் கொடுத்த பா.விஜய்..

பின்னாளில் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் பின்னாளில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் மனோரமா சீனியர் நடிகையாகவும்,நாகேஷ் அறிமுக நடிகராகவும் நடிக்கும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்ததாக அப்போது பேச்சு எழுந்தது. எனினும் அந்தக் காட்சியும் பிரமாதமாகவே இருக்கும்.

கல்கியின் ‘கள்வனின் காதலி’, கொங்கு நாட்டுத் தமிழை புகழ் படுத்திய “மக்களைப் பெற்ற மகராசி’, அண்ணாவின் ‘ரங்கோன்’ ராதா, ‘அம்பிகாபதி’, அறிவாளி, ‘மணமகன் தேவை’, ‘ராணி லலிதாங்கி’ படங்களில் கதாநாயகியாக நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் சாரங்கதாரா, ராஜபக்தி (வில்லி), தெனாலிராமன் (வில்லி), படங்களிலும் நடிகர் திலகத்துடன் நடித்துள்ளார்.

இவர்கள் இருவர் காம்பினேஷனில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு படம்’அறிவாளி’. நடிகர் திலகமும், பானுமதியும் போட்டி போட்டுக் கொண்டு தத்தம் திறமைகளை நிரூபித்திருப்பார்கள். தத்துவம், ஜோதிடம் இவற்றிலும் சிறந்தவர் பானுமதி.  தனது சொந்த தயாரிப்பாக ‘மணமகன் தேவை’ என்ற அற்புத நகைச்சுவை படத்தை நடிகர் திலகத்தை வைத்து அருமையாக எடுத்திருந்தார் பானுமதி.  மேலும் AVM -ன் ‘அன்னை’ படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார் பானுமதி.

Avatar photo
John A

ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.