சூர்யவம்சம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மாஸ்டர் மகேந்திரன் செஞ்ச அட்ராசிட்டி.. கோபத்தில் விக்ரமன் எடுத்த முடிவு..

By Ajith V

Published:

ஒரு சமயத்தில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் பலரும் பின்னாளில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக கூட மாறுவார்கள். அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மீனா, ஸ்ரீ தேவி, மாஸ்டர் மகேந்திரன், ஷாலினி உள்ளிட்ட பாலரை சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொரு பக்கம் குழந்தை நட்சத்திரமாக நடித்து சில கதாபாத்திரங்கள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதன் பின்னர் காணமால் போய் விடுவார்கள்.

அப்படி பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திர கதாபாத்திரங்கள் மூலம் நிறைய நல்ல காட்சிகளை செய்திருந்த நிலையில் சூர்யவம்சம் திரைப்படத்தில் வரும் அந்த பேரன் கதாபாத்திரத்தை நிச்சயம் யாராலும் மறந்து விட முடியாது. அதன் பின்னணி பற்றி பிரபல குணச்சித்திர நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் மிக தத்ரூபமாக எமோஷனல் காட்சிகளையும் குடும்ப பாங்கான திரைப்படத்தையும் எடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் விக்ரமன். சூர்யவம்சம், வானத்தைப்போல உள்ளிட்ட விக்ரமன் இயக்கிய பல திரைப்படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வகையில் அமைந்திருக்கும்.

அப்படி இருக்கையில் தான் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து தேவயானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த சூர்யவம்சம் திரைப்படமும் எவர்க்ரீன் திரைப்படம் என தைரியமாக சொல்லி விடலாம். அந்த காலத்திலிருந்து இன்று வரையிலும் தற்போதைய இளைஞர்கள் வரை ரசிக்கும் திரைப்படமாக இருக்கும் சூர்யவம்சம் படத்தில் தாத்தா சரத்குமாரின் பேரனாக நடிகை ஹேமலதா என்பவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த நடிகர் பாவா லட்சுமணன், “அந்த படத்தில் நான் ப்ரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது மறக்க முடியாத ஒரு தருணம் என்னவென்றால் அதில் வரும் குழந்தை கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை பற்றி ஆலோசனை சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் மாஸ்டர் மகேந்திரன் நிறைய படங்களில் நடித்து வந்ததால் அவரை அழைத்து வந்தார்கள். அவர் நேராக குழந்தை என்றும் பாராமல் நேராக வந்து உட்கார்ந்து ‘எனக்கு எத்தனை ஷாட் எடுப்பீர்கள், எப்படி கேமரா அங்கிள் வைப்பீர்கள்’ என பெரிய நடிகர் போல பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும் இயக்குனர் விக்ரமன் கடுமையாக கோபப்பட்டு அந்த பையனை அனுப்பி விடுங்கள், இல்லை என்றால் நான் எதையாவது செய்து விடுவேன்’ என கூறினார்.

இதன் பின்னர் அந்த கதாபத்திரத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரங்கள் யாரும் கிடைக்கவில்லை என கூறியதும் ஹேமலதா என்ற பெண்ணை ஆண் குழந்தையாக கெட்டப் போட்டு நடிக்க வைத்து அந்த காட்சிகளை எடுத்தோம்” என பலரும் அறியாத பின்னணியை பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.