800 கோடியா..? ஷாக்கான சரத்குமார்.. இப்போ விட்டா கூட நான் மூட்டை தூக்கி பிழைப்பேன்

By John A

Published:

தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகரும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவரும், அரசியல் பிரமுகருமான நடிகர் சரத்குமார் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக பெங்களுரில் பல்வேறு வேலைகளைச் செய்திருக்கிறார்.

எத்தனை வேலைகளைச் செய்து வந்தாலும் உடல் நலத்தைப் பேணுவதிலும், ஜிம் சென்று உடலைக் கட்டுமஸ்தாகவும் வைத்திருந்ததால் நண்பர்கள் ஆலோசனைப் படி சினிமாவில் நுழைந்தார். முதலில் வில்லன், செகண்ட் ஹீரோ, ஹீரோ என சினிமாவில் உச்சத்தை அடைந்தார் சரத்குமார்.

தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தற்போது ராதிகாவை இரண்டாவதாக மணம் முடித்து அவருடன் வாழ்ந்து வருகிறார் சரத்குமார். சரத்குமாருக்கும் அவரின் முதல் மனைவிக்கும் பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி. லண்டனில் திரைப்படவியல் படித்துவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் வரலட்சுமி. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார் வரலட்சுமி.

வாய்ப்பு கொடுங்க.. வீட்டு வாடகையாச்சும் கொடுப்பான்.. குணச்சித்திர நடிகனுக்காக விஜயகாந்த் சொன்ன வார்த்தை..

நடிகை வரலட்சுமிக்கும் மும்பைத் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. மணமகனுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களின் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் நேரில் வந்துவாழ்த்துத் தெரிவித்தனர்.

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இத்திருமணத்தில் தடபுடலாக விருந்து, நடனம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சரத்குமார் தனது மகளின் திருமணத்திற்காக கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் வரை செலவழித்ததாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவியது.

இது குறித்து நடிகர் சரத்குமார் கூறுகையில், “எனது மகளின் திருமணத்திற்காக 800 கோடி செலவழித்தாகக் கூறுகிறார்கள். அது எங்க இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. என்னை இப்போது விட்டால் கூட நான் மூட்டை தூக்கிக் கூட பிழைத்துக் கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.

தற்போது ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்ச்சிகள் உலகமே மூக்கில் வைக்கும் வகையில் நடந்து வரும் வேளையில் வரலட்சுமிக்கும் 800 கோடி செலவு செய்ததாகக் கூறப்பட்து குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சரத்குமார்.