நம்மையும் கண் கலங்க வைத்த நடிப்பு.. வைதேகி காத்திருந்தாள் படத்தில் மிரள வெச்ச நடிகருக்கு இப்படி ஒரு முகமா?..

தமிழ் சினிமாவில் நடிகராக சிலர் இருக்கும் பட்சத்தில், அவர்களை நாம் பார்க்கும்போது அவர்கள் நடிகர்கள் மட்டும் தான் என நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், அவர்களிடம் உள்ள வேறு திறமை தான் அவர்களை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கும். அந்த வகையில், சிங்கம் புலி, மனோபாலா, ரவி மரியா என நடிகராக நமக்கு தெரிந்த பல முகங்கள் இயக்குனர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகரான ராகவேந்திரா வேறொரு துறையிலும் கில்லாடியாக இருந்ததை பற்றி தற்போது காணலாம். ’வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் ரேவதியின் அப்பாவாக மிகச் சிறப்பாக ராகவேந்திரா நடித்திருப்பார். அவரது நடிப்பு தனித்துவமாக இருப்பதால் தமிழ் சினிமாவில் அவருடைய நடிப்பிற்கு என ஒரு மரியாதை இருந்தது.

‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற திரைப்படத்தில் இளம் விதவை கேரக்டரில் ரேவதி நடித்த நிலையில் அவரது நிலையை எண்ணி உள்ளுக்குள் வெதும்பும் ஒரு அற்புதமான கேரக்டரில் ராகவேந்திரா நடித்திருப்பார். குறிப்பாக ’அழகு மலர் ஆட’ என்ற பாடலில் ரேவதி தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியில் வெதும்பும் அப்பாவாக நடித்திருப்பார். மேலும் இந்த பாடலை அவரே பாடவும் செய்திருப்பார்.

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கிடைத்த புகழ் காரணமாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ’சிந்து பைரவி’ திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது காமெடி காட்சிகள் சூப்பராக இருக்கும். இதனைத் தொடர்ந்து அவர் ’விக்ரம்’ திரைப்படத்தில் சற்று வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார்.

மேலும் ’சின்னதம்பி பெரிய தம்பி’ ’அண்ணா நகர் முதல் தெரு’ ’சொல்ல துடிக்குது மனசு’ ’வாய் கொழுப்பு’ ’கற்பூர முல்லை’  ’வாழ்க ஜனநாயகம்’ ’ஹரிச்சந்திரா’ ’நீ வருவாய் என’ ’இளையவன்’ ’காதலன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். குணசித்திர கேரக்டர் மற்றும் வில்லன் கேரக்டரில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் ராகவேந்திரா ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பது பலருக்கும் அறியாத உண்மையாக இருந்தது. ’நினைவில் ஒரு மலர்’ என்ற திரைப்படத்தில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை அடுத்து அவர் ’யாகசாலை’ ’தேன் சிட்டுகள்’ ’படிக்காத பாடம்’ என சில படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

மேலும் நடிகர் ராகவேந்திரா சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக கோலங்கள் தொடரில் அவர் நடித்த சர்ச் ஃபாதர் கேரக்டர் ரசிகர்கள் மனதை வென்றது. நடிகர் ராகவேந்திரா, சுலோச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியும் ஒரு சிறந்த பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நடிகர் ராகவேந்திரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு திரை உலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. பல திரையுலக பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவும் செய்திருந்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews