ஆன்மீகம்

எந்த விநாயகரை எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும்னு தெரியுமா உங்களுக்கு..?

முழு முதற்கடவுளும், மூலக்கடவுளுமாக நாம் வழிபடுவது பிள்ளையாரைத் தான். காரியம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கும் நேரம் நாம் முதலில் வழிபடுவது விநாயகரைத் தான். அவர் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தி. அந்த வகையில் பிள்ளையாருக்குத் தான் அதிகளவில் கோவில்கள் உள்ளன.

எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அங்கு ஒரு பிள்ளையார் அமர்ந்திருப்பார். குறிப்பாக அரச மரத்தின் அடியில் பிள்ளையாருக்குக் கண்டிப்பாகக் கோவில் இருக்கும். அப்படி பல மரங்களின் அடியில் பிள்ளையார் இருப்பார்.

”பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்… ஆற்றங்கரை ஓரத்திலே அரச மர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்..” என்று ஒரு பக்திப் பாடல் உண்டு. ஐயப்ப பக்தர்கள் இந்தப் பாடலைப் பாடுவர்.

இதே பாடலில், ”வன்னி மரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார், வில்வ மரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்” என்ற வரிகள் வரும். அந்த வகையில் குறிப்பிட்ட சில மரங்களின் அடியில் வீற்றிருப்பதைப் பொருத்து பிள்ளையாரின் பலன்கள் நமக்குக் கிடைக்கிறது.

அந்த வகையில் எந்தப் பிள்ளையாரை வணங்கினால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

வன்னிமரப் பிள்ளையார்

Vanni mara Vinayagar

அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடும். தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

புன்னை மரப் பிள்ளையார்

ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.

மகிழ மரப் பிள்ளையார்

இந்தப் பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.

மாமரப் பிள்ளையார்

இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால் கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.

வேப்ப மரத்து விநாயகர்

Pillaiyar

உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.

ஆலமரப் பிள்ளையார்

ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து, தானம் அளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வில்வ மரப் பிள்ளையார்

சித்திரை நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வந்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.

அரசமரப் பிள்ளையார்

பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் இலாபம் கூடும்.

Published by
Sankar

Recent Posts