இது ஒரு புனிதப் பயணம்….! நளனை ஆட்டிப் படைத்த சனிபகவான் விலகியது எப்படின்னு தெரியுமா?

ஒருவருக்கு சனி பிடித்தால் அவரால் மீளவே முடியாது. தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். நிம்மதி இருக்காது. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் தோல்வி தான். வியாபாரத்தில் நஷ்டம். கல்வியில் நாட்டம் இருக்காது. அதிலும் ஏழரைச் சனி ஏற்பட்டு விட்டால் அவன் பாடு திண்டாட்டம் தான். அந்த சனி பகவானிடமிருந்து விடுபட என்ன வழி என்று தெரியாமல் திணறுபவர்களையும் பரிகாரங்களுக்கு மேல் பரிகாரங்கள் செய்பவர்களையும் பற்றி நாம் பார்த்திருப்போம். அப்பேர்ப்பட்டவர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு வழிகாட்டுவதாக அமையலாம். பார்க்கலாமா…!

காரைக்காலுக்கு மேற்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – காரைக்கால் ரெயில் மூலமாகவும் திருநள்ளாறுக்கு வரலாம். கும்பகோணம் – காரைக்கால், மயிலாடுதுறை – காரைக்கால் பேருந்து வழியாகவும் திருநள்ளாறுக்கு வரலாம்.

சைவத்திருமுறைகளுள் திருநள்ளாறு பேசப்படும் பெயர். அப்பர், சுந்தரர் பாடிய தலம். நள்ளாறு என்றால் அரிசிலாற்றிற்கும், நூலாற்றிற்கும் நடுவில் இருக்கும் தலம் என்று பொருள்.

Thirunallaru 5
Thirunallaru 5

நளன் ஆறுதல் பெற்றதால் நள்ளாறு என்று பெயர் பெற்றது. இத்தலத்திற்கு தர்ப்பரண்யம் என்றும், நன்முகன் இங்கு வழிபட்டு வாழ்வு பெற்றதால் ஆதிபுரி என்றும் பெயர் உண்டு. நகவிடங்கராகிய தியாகேசப் பெருமான் எழுந்தருளி இருப்பதால் நகவிடங்கபுரம் என்றும் நளன் வணங்கிக் கலி நீங்கிக் களித்ததால் நளேச்சுவரம் என்றும் பெயர் பெற்றது.

தல வரலாறு

Thirunallaru 2
Thirunallaru 2

நிடத நாட்டை ஆண்டு வந்தான் மன்னன் நளன். அவன் விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியை சுயம்வரத்தால் மணந்து கொண்டான். இது சனிபகவானக்குப் பிடிக்கவில்லை. தனக்குக் கிடைக்காத தமயந்தியை மணந்து கொண்டானே என அவனைப் பழிபாங்க 12 ஆண்டுகள் காத்திருந்தார். நளன் எந்தக் குறையும் இன்றி இனிதே ஆட்சி நடத்தி வந்தான்.

ஒரு அந்தி மாலைப் பொழுதில் நளன் கால் கழுவும்போது புறங்காலில் நீர் படவில்லை. இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டான். அன்று இதுதான் சமயம்… குற்றம் செய்துவிட்டான் என சனி பகவான் நளனைப் பிடித்துக் கொண்டார்.

அப்போது முதல் நளனை ஆட்டிப் படைத்துவிட்டார் சனிபகவான். துன்பம் என்றால் கொஞ்சநஞ்சமல்ல. அவனை அண்டை நாட்டு அரசனுடன் சூதாட வைத்தார். நாட்டை இழந்து கானகம் செல்ல வைத்தார். நாட்டை விட்டு தனது மனைவி, மைந்தர்களுடன் வெளியேறினான் நளன். தனது 2 மைந்தர்களுடைய வாழ்வாவது நல்லபடியாக அமையட்டும் என்று அவர்களை தனது மாமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

கானகத்திலும் நிம்மதியில்லை. சனிபகவான் தமயந்தியை விட்டு பிரியச் செய்தார். அங்கு கார்க்கோடன் என்ற பாம்பு நளனைத் தீண்டியது. அதனால் நளன் உருமாறி குரூபியானான். இருதுபன்னன் என்ற மன்னனுக்குத் தேரோட்டியாக வேலை செய்தான். தமயந்தியோ கணவன் இன்றி தவித்தாள்.

Nalan Thamayanthi
Nalan, Thamayanthi

கணவனைக் காண வேண்டும் என தந்தையிடம் சொல்லி இன்னொரு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாள். அப்போது இருதுபன்னன் சுயம்வரத்திற்கு வந்தான். நளன் உருமாறி இருந்ததால் நளனைத் தன் பிள்ளைகள் மூலமாக அறிந்து கொண்டாள். நளனை மீண்டும் பெற்றாள். நல்லகாலம் பிறக்க ஆரம்பித்தது. மீண்டும் தனது அழகான உருவத்தைப் பெற்றான் நளன். மாமன் படை கொண்டு நிடத நாட்டை மீட்டான். சீரும் சிறப்புமாக ஆண்டான்.

Thirunallaru
Thirunallaru

ஆனால் மனதில் நிம்மதி மட்டும் இல்லை. அப்போது நாரதர் நளனே தீர்த்த யாத்திரை சென்று வந்தால் நிம்மதி கிட்டும் என்றார். உடனே அரசுப் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு காசி முதல் கன்னியாகுமரி வரை புண்ணிய பயணம் செய்தான். மன அமைதி கிட்டவில்லை.

விருத்தாச்சலம் வந்த போது பரத்துவர முனிவரை சந்தித்தான் நளன். திருநள்ளாறு சென்று அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் குளித்து தார்ப்பண்யேசுவரரை வழிபடச் சொன்னார்.

அவ்வாறே செய்ததும் நளனைப் பிடித்து வந்த சனிபகவான் விலகினார். பெரிய ஒரு சுமை தன் மனதிலிருந்து விலகியதைக் கண்டு கொண்டான் நளன். அன்று முதல் புது உற்சாகத்துடன் ஆட்சி புரிந்து வந்தான்.

சனித்தொல்லைகள் நீங்க வேண்டும் என்றால் திருநள்ளாறு சென்று தீர்தத்த்தில் குளித்து தார்ப்பண்யேசுவரரை வணங்க வேண்டும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews