மூன்று வேளை உணவிற்காக நாடக சபாவிற்கு சென்றவர் நாட்டை ஆண்ட வரலாறு… எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்து வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார். சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்திரன். “தாயை பிரியமாட்டேன், மேலே படிக்கவேண்டும்” என்று கதறி அழுதவரை, “உணவுடன் தங்குமிடம் கிடைக்கும்” என்று ஆறுதல் சொல்லி சபாவில் சேர்ந்துவிட்டார் அவரது தாயார்.

1925ல் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் நடிப்பு துறையில் நிலையான இடம் பிடிக்க 22 வருடங்கள் போராடினார். 1947ல் திரை கதாநாயகன். 1958ல் வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தபோது அவருக்கு வயது 41. 1960 களில் எம்.ஜி.ஆர் தனக்கான இடத்தை பிடித்தார். உதவிகள், துரோகங்கள், ஏமாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் என 35 வருடங்கள் போராடி பெற்ற இடம் அது.

டைட்டில் கார்டில் கூட இடம் பெறாத நடிகர் : காமெடி ஜாம்பவானாக உச்சம் தொட்ட சீக்ரெட்

ஆனால் மக்கள் திலகமாக உருமாறிய பின்னாளில் அவரது வீட்டிற்கு வரும் அனைவரையும் அவரே “சாப்பிட்டீர்களா” என்று விசாரிப்பார்; சமபந்தியில் சாப்பிட வைப்பார் என்று பலரும் நினைவு கூறுகிறார்கள்.

எட்டு வயதில் உணவிற்காக தனது அம்மாவையும், கல்வியையும் பிரிய நேர்ந்தது அவர் வாழ்வின் முதல் துயரம். அந்த துயரம் 50 வருடங்கள் கழித்து அவர் மாநிலத்தின் முதல்வரான போது மேம்படுத்தப்பட்ட மதிய உணவுத்திட்டமாக உருவெடுத்தது.

கடும் எதிர்ப்புக்கிடையே  நடத்தப்பட்ட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாத ஆட்சியாக மாற்றி ய திட்டம் சத்துணவுத் திட்டம். “வேலைக்குப்போகும் ஏழை தாய்மார்கள் இனி தனது மகன் அங்கே வயிறார சாப்பிட்டுக்கொண்டிருப்பான்; சத்தான உணவு அவனுக்கு கிடைக்கிறது என்று நிம்மதியுடன் அவர்கள் வேலையை தொடரலாம்” என்று பேசினார்.

எம்.ஜி.ஆர். திரையின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு பிழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் வெளிவந்த அவரது போட்டோ அவர் ரசிகர்களை வெறி கொள்ள செய்தது. ஒரு தேர்தலையே வெற்றிகொள்ள வைத்தது.

ஆனால் எம்.ஜி.ஆரால் பழைய குரலில் பேசமுடியவில்லை. எதிர்தரப்பினரால் பெரும் கேலிக்குள்ளானார். இருந்தாலும் அவருக்கேயுரிய பிடிவாதத்துடன் கடைசிவரை சொந்த குரலில் பேசி நடித்தார்.

“ஊமையன்” என்று கேலி செய்த குரல்கள் தன்னை காயப்படுத்தியதாக அவர் என்றுமே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது மரணத்திற்கு பின் வெளியான உயிலில் தனது சொத்தில், ராமாவரத்தில் 6.5 ஏக்கர், வாய் பேசா, காது கேளா குழந்தைகளுக்கான பள்ளிக்கென்று எழுதி வைத்திருந்தார்.

கோடிகள் சம்பாதித்து, பாதியை தானமாக எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்கு பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். அது மக்கள் திலகம் என்னும் மாபெரும் தலைவனுக்கு மட்டுமே உண்டான குணம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews