மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா? வைரலாகும் வாலி-நா.முத்துக்குமார் பேட்டி

தற்போது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுவது வைரமுத்து- இளையராஜா, கங்கை அமரன் சர்ச்சை. வைரமுத்து அண்மையில் படிக்காத பக்கங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசும் போது மொழி பெரிதா, இசை பெரிதா என்ற பாணியில் பேசும் போது சில கருத்துக்களைக் கூறியிருந்தார். அப்போது அந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கை அமரனும் தனது சகோதரர் இளையராஜாவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை முன்வைத்தும், தங்களால் வளர்ந்தவர் தான் வைரமுத்து என்றும், இதோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வீடியோவானது கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த நிலையில் வசந்த் டிவியில் பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான வாலி 1000 என்ற நிகழ்ச்சியானது சமூக வலைதளப் பக்கத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வாலியுடன் தற்போது உள்ள கவிஞர்கள் அனைவரும் இணைந்து உரையாடுவது போன்றும், பாடல்கள் பிறந்த கதை பற்றியும் விவாதிப்பது போன்ற நிகழ்ச்சி அது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மறைந்த வாலியும், நா.முத்துக்குமாரும் என இரு மறைந்த கவிஞர்களும் சந்தித்துக் கொண்ட பேட்டி வலம் வருகிறது. இதில் நா. முத்துக்குமார் தான் எவ்வாறு பாடல்கள் எழுத ஆரம்பித்தேன், பின் எவ்வாறு திருத்திக் கொண்டேன் என்று பேசியிருப்பார். அதனை வாலியும் ஆமோதித்திருந்தார்.

காதல் கோட்டை வெற்றிக்கு கை கொடுத்த நடிகை ஹீரா.. ஒர்க் அவுட் ஆன தயாரிப்பாளரின் தந்திரம்

அதில் நா.முத்துக்குமார் பேசும் போது இயக்குநர் ஒரு காட்சியைப் பற்றிக் கூறும்போது, தான் அப்போது அந்தக் காட்சிக்குத் தகுந்த வார்த்தைகளை முதலில் எழுதி பின் அதனை திருத்திப் பாடல்கள் இயற்றியதாகக் குறிப்பிட்டிருப்பார். அதன்பின் இந்த முறை தவறு இசையமைப்பாளர் என்ன டியூன் போடுகிறார் அந்த டியூனுக்குத் தகுந்தவாறு பாடல்கள் எழுதுவதுதான் சரியான முறையாக இருந்தது என்று பேசியிருப்பார்.

இந்த முறை சரியா என்று வாலியிடம் அவர் கேட்க, வாலியோ மெட்டுக்குப் பாட்டு எழுதுவது, பாட்டுக்கு மெட்டு போடுவது என இரண்டுமே சரியான முறைதான். எனினும் மெட்டுக்குப் பாட்டு எழுதும் போது அதன் தரம் இன்னும் கூடுகிறது.

அது இசையமைப்பாளர் கையில்தான் உள்ளது என்று விளக்கம் கொடுத்திருப்பார். மேலும் தங்களுடைய சொந்த அனுபவங்களை பாடல்களாக இயற்றும் போது அது சரிவராது. அந்தக் காட்சிக்கு என்ன தேவையோ அல்லது அந்த இடத்தில் நாம் கதாநாயகனாக உணர்ந்தால் தான் நல்ல பாடல் பிறக்கும்.

தத்துவப் பாடல்களிலும் லாஜிக் இருக்க வேண்டும் என இயக்குநர்கள் எதிர்பார்ப்பர். எனவே இயக்குநர்களின் தேவை அறிந்து பாடல்களை இயற்ற வேண்டும் எனவும் நா.முத்துக்குமாருக்கு அதில் தான் பாடல் எழுதும் முறை குறித்து விளக்கம் அளித்திருப்பார் வாலி.

ஒரு பெருங்கவிஞனும், வளர்ந்து வந்த ஒரு கவிஞனின் இந்த ஆரோக்கியமான விவாதம் ஒரு பாடல் எப்படி இயற்ற வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் விதமாக இருக்கும். இந்தப் பேட்டியைப் பார்த்தாலே மொழிக்குப் பாட்டா? இல்லை பாட்டுக்கு மொழியா என்பதனை இலகுவாக அறியலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews