புரட்டாசி மாதத்தில் சுறா புட்டு சாப்பிட வேண்டுமா அப்போ இந்த சுவையான மீல்மேக்கர் புட்டு ட்ரை பண்ணுங்க…

பொதுவாக புரட்டாசி மாதத்தில் அதிகப்படியான மக்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் அவர்களுக்கு அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு பதிலாக சைவத்தில் சில உணவு வகைகளை அதே போல சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் மேக்கர் வைத்து சுறா புட்டு செய்து நாம் சாப்பிடலாம். இந்த மீல்மேக்கர் புட்டை குறைந்த நேரத்தில் செய்து முடித்து விடலாம். மேலும் இது சாம்பார் சாதம், தயிர் சாதம் இவற்றிற்கு இணையாக சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்

மீல் மேக்கர்- 25- 30

வெங்காயம்- 2

எண்ணெய் – 2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் – கால் கப்

பட்டை – 2 துண்டுகள்

கிராம்பு – 3

ஏலக்காய் – 2

பெருஞ்சீரகம்- ஒரு தேக்கரண்டி

சீரகம் – ஒரு தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி

மல்லி புதினா இலை – கைப்பிடி அளவு

பச்சை மிளகாய்- 3-4

செய்முறை

முதலில் மீல்மேக்கரை 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு ஓரமாக எடுத்து வைத்து விடவும்.

20 நிமிடங்கள் கழித்து மீல்மேக்கர் பதமாக வெந்ததும் அதை தண்ணீரில் இருந்து நன்கு பிழிந்து எடுக்கவும் ஒன்றுக்கு இரண்டு முறை குளிர்ந்த நீரில் அதை மீண்டும் சுத்தம் செய்து கொள்ளலாம்.

இப்போது இந்த மீல்மேக்கரை மிக்ஸி ஜாரில் சேர்த்து பரபரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் மையாக அரைக்க தேவையில்லை.

அதன் பின் அதே ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், சீரகம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் பரபரப்பாக அரைத்துக் கொண்டால் போதுமானது.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும் அதில் கடுகு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தாளிப்பில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இரண்டு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

15 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத தக்காளி தொக்கு ரெசிபி!

வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் மீல்மேக்கரை அதனுள் சேர்க்க வேண்டும். அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலாவை அந்த மீல்மேக்கர் கலவையுடன் சேர்க்க வேண்டும்.

இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம், இந்த கலவையை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

மிதமான தீயில் அவற்றை சமைக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து மல்லி புதினா இலைகள் தூவி இறக்கினால் நமக்கு மீல்மேக்கர் புட்டு தயார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...