ஆரம்பகாலத்துல நடிகர் சங்கம் எப்படி இருந்தது? கடனை அடைச்சது எப்படி? கேப்டன் சொல்லும் சுவாரசியத் தகவல்கள்

90களில் தமிழ்த்திரை உலக நடிகர் சங்க கடன் வட்டி மேல் வட்டி போட்டு 4 கோடியைத் தொட்டது. கேப்டன் விஜயகாந்த் தான் நடிகர்களுக்குள் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி புத்திசாலித்தனமாக கலைநிகழ்ச்சி நடத்தி அந்தக் கடனை எல்லாம் அடைத்தார். அதனால் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை எடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்.

நடிகர் சங்கம் முதல்ல 1952ல ஆரம்பிச்சது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் நாலும் சேர்ந்து தான் தென்னிந்திய நாடக சங்கம்னு வச்சிருந்தது. நாகேஸ்வரராவ், மது, சிவாஜி, ராஜ்குமார் இப்படி ஒவ்வொரு மாநிலங்கள்லயும் 2 பேரா சேர்ந்து மொத்தம் பத்து பேரு டிரஸ்ட் மெம்பரா இருந்தாங்க. நடிகர் சங்கத்தோட செயல்பாடு என்னன்னா படத்துக்கு நடிகர்கள் கால்ஷீட்ட கரெக்டா கொடுக்கணும்.

Vijayakanth 3
Vijayakanth

தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் அவங்க கொடுக்கலன்னா வந்து சொல்வாங்க. நாங்க பேசிக் கொடுப்போம். அதே மாதிரி சம்பளப் பிரச்சனைன்னாலும் நாங்க பேசிக் கொடுப்போம். அதே மாதிரி நலிந்த நடிகர்கள்னாலும் அவங்களுக்கான வேலைவாய்ப்பை இப்ப அதிகப்படுத்திருக்கோம்.

அன்னைக்கு நாடகக்கலை பிரபலமா இருந்துச்சு. அப்புறம் சினிமா. இன்னிக்கு விஞ்ஞானம், கம்ப்யூட்டர்னு நிறைய முன்னேறிக்கிட்டு இருக்கு. அவங்களுக்கு நம்ம வேலை கொடுக்கணும்கறதுக்காக அதை ஒரு கண்ணோட்டமா எடுத்துக்கிட்டு வேலை கொடுத்துக்கிட்டு இருக்குறோம்.

இதன் பயனாக நடிகர், நடிகைகள்லாம் சேர்ந்து ஒரு நல்ல விஷயம் பண்ணதனால கடனை அடைச்சோம். கடனை அடைச்சிட்டு நாங்க என்ன பண்ணினோம்…? முதல்ல அந்த நடிகர் சங்கத்துக்கு என்னென்ன தேவைகள்?

முதல்ல ஒரு அம்பது பேருக்கு மாசம் மாசம் 300 ரூபாய் பென்சன். 60 வயசுக்கு மேல பென்சன். மத்திய அரசு நிதி. தமிழக அரசு நிதி உதவியும் இருக்கு. இந்த ரெண்டு நிதி உதவியும் இல்லாதவருக்குத் தான் பென்சன் கொடுத்துருக்கோம். 2002டோட அம்பது வருஷம் முடிஞ்சிருச்சு. பொன்விழா கொண்டாடலாம்னு இருக்கோம்.

இறந்து போனா உதவித்தொகை, கல்யாணத் தொகை, நடிப்புத் தொகை என எல்லாருக்குமே ஒரே மாதிரியான உதவித்தொகையைத் தான் கொடுத்துக்கிட்டு இருக்கோம்.

Captain Vijayakanth
Captain Vijayakanth

இலங்கை இந்தியா கூட்டுத்தயாரிப்பான அகல்விளக்கு படத்துல சிலோன் சின்னையா நடிச்சிருக்காரு. இது இப்போ விடுபடவில்லை. சிங்கப்பூர்ல இருந்து இங்க வந்து நடிக்கலையா? சிலோன் மனோகர் வந்து நடிக்கலையா? வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு சொல்வாங்க.

நம்ம தமிழ்ப்படத்துல தான் எந்த மொழிக்காரரையும் நடிக்க வைக்கிறோம். இன்னிக்கு தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் நல்ல உறவு தான் இருக்கு. தொலைக்காட்சியில் செய்தி சேனல்கள் அதிகமாயிடுச்சு. எப்பவுமே படிக்கறதை விட பார்த்து கேட்க தான் விரும்புவாங்க. அதனால் டிவி பார்க்குறவங்க அதிகமாயிட்டாங்க. அங்க தான் செய்திப் பார்க்குறாங்க.

அதனால பத்திரிகை படிக்குறது குறைஞ்சி போச்சு. அவங்களுக்கு ஏதாவது செய்தி வேணும்கறதுக்காக சின்ன விஷயத்தைப் பெரிசு படுத்துவாங்க. ஹெட்லைன் பண்றாங்க. அதுக்கு ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லணும். இப்ப தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் சண்டையே இல்ல. சண்டை வர்ற மாதிரி ஹெட்லைன் போட்டுருவாங்க.

உள்ளே பார்த்தீங்கன்னா ஒண்ணுமே இருக்காது. அப்ப உணர்ச்சிவசப்பட்டு நடிகர் யாராவது பேசுவாங்க. அதைப் பத்து பத்திரிகை புடிச்சிக்கிடும். அதுக்குப் பதில் கேட்டு ஒரு தயாரிப்பாளர்கிட்ட போனா அவங்க உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொன்னா அதை இங்க போடுறது. இவங்களாகவே எழுதிக்கறது. மற்றபடி ரெண்டு பேருக்கும் சுமூகமான உறவு தான் இருக்கு. இதைப்பத்தி நாங்க பேசிக்கிறதே இல்ல.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews