அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பின் மீண்டும் அதிலிருந்து மீண்டு படங்களில் நடிப்பது சிம்புவுக்கு தொடர் கதையாகி வருகிறது. சரியாக ஷுட்டிங் நேரத்திற்கு வர மாட்டார் என்று இவர் மேல் ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும் அண்மையில் வெளியான சில படங்களில் குறித்த நேரத்தில் வந்து பட யூனிட்டையே வியப்பில் ஆழ்த்துகிறார்.
நம்ம சிம்புவா இது என்று சொல்லும் அளவிற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டார். சமீபத்தில் வெளியான பத்துதல, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் சிம்புவின் சின்சியரைப் பார்த்து அவரது சினிமா வட்டாரமே மூக்கின் மேல்விரல் வைத்தது.
தற்போது சர்ச்சைகளின் நாயகன் சிம்புவிற்கு சாதகமாக நீதிமன்றம் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் சிம்பு கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இயக்குநர் கோகுல் இயக்குவதாக இந்தப் பட விவகாரத்தில் தான் தற்போது சிம்புவுக்கு சாதகமாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கொரோனா குமார் படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி சம்பளம் பேசப்பட்டு, 4.5 கோடி முன்பணமாகத் தரப்பட்டது. ஆனால் 1 கோடி மட்டுமே கொடுத்ததாக சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சிம்பு படப்பிடிப்பிற்கு வராததாலும், மேலும் அவர் தங்களது படத்தை முடிக்காமல் வேறு படங்களில் நடிக்கக் கூடாது எனவும் வேல்ஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சிம்புவுக்கு ஒரு கோடியை திரும்ப செலுத்த உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வர சிம்பு ஒரு கோடி செலுத்தியதற்கான பிரமாண இரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனையடுத்து மீண்டும் வழக்கை நீதிபதி, கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்காமல் இதர படங்களில் நடிக்கக் கூடாது என்ற வேல்ஸ் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிகப்படுகிறது.
மேலும் சிம்பு வேறு படங்களில் நடிக்கவோ, வெளிநாடு செல்லவோ தடை விதித்தால் அவர் தொழில் ரீதியாக பிற நிறுவனங்களுடன் போட்ட ஒப்பந்தத்தால் பணிகள் பாதிக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து சிம்புவுக்கு எதிராக வேல்ஸ் நிறுவனம் தொடுத்த வழக்கில் சிம்புவுக்கு சாதகமாக நீதிபதி கருத்து தெரிவிக்க அவரது ரசிகர்கள் குஷியாகினர்.





