பொழுதுபோக்கு

சாதி ஆணவக் கொலைகள் பற்றி படம் எடுப்பீங்களா? மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி

இயக்குநர் ராமிடம் கற்றது தமிழ், பேரன்பு, தரமணி போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகானவர் தான் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே நெல்லை வட்டார சாதிக் கொடுமைகள் பற்றிப் பேச, இயக்குநர் பா.ரஞ்சித் வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் என்ற முத்திரை குத்தினர்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்திலும் தாழ்த்தப்பட்டோர் சாதிக் கொடுமைகள் அனுபவிப்பதை படம்பிடித்துக் காட்டினார். இதனால் மாரி செல்வராஜ் மீது தலித் சாதி பற்றிய படங்களை எடுப்பவர் என்ற முத்திரை விழுந்தது.

இதனையடுத்து மாமன்னன் படத்தில் சற்று கூடுதலாகவே சாதிக் கொடுமைகள் பற்றி காட்டினார். தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார். தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகள் பற்றி விழிப்புணர்வுப் படங்கள் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு பரபரப்பான பதிலை அளித்துள்ளார் மாரி செல்வராஜ்.

அதில், “அடிப்படையிலேயே நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. இளைஞர்களிடத்தில் நிறைய விவாதங்கள் தேவைப்படுகிறது. சாதியின்மையை உடனே மாற்ற முடியாது. காலங்காலமாக சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. ஒரு நாளில் மாற்ற முடியாது. ரொம்பவே மெனக்கெடல் தேவைப்படுகிறது.

இளையராஜாவுக்காக 13 படங்களை இழந்த இயக்குநர் ஜி.எம்.குமார்.. இவரால் இளையராஜா இழந்த ஒரே படம்..

அதனை மாற்ற முடியாத சூழலிலும் உள்ளது. ஏனெனில் உளவியலாக நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சாதி. இதனை சாதாரண சட்டம் போட்டு மாற்ற முடியாது. நாம் அனைவரும் இணைந்து முன்னெடுத்து உறுதியான ஒரு நிலைப்பாட்டில் இருந்தால் தான் அதற்குரிய மாற்றங்கள் வரும்.இப்படி நாம் செய்வதால் அடுத்த தலைமுறையாவது குறைந்த பட்சம் ஒரு புரிதலுக்காகவாவது வரும் ” என்று கூறினார்.

மேலும் ஓடிடி தளங்கள் குறித்துக் குறிப்பிடும் போது, “வீட்டிலேயே சாமி படங்கள், பூஜையறை வைத்திருக்கிறோம். அப்புறம் ஏன் கோவிலுக்குச் செல்கிறோம். அதுபோலத்தான் ஓடிடி ஒரு நூலகம் போன்றது. சினிமா திரையரங்குகளும் அதன் பணியைச் செய்து கொண்டிருக்கும். இதனால் பாதிப்பு ஏதும் கிடையாது.” என்றும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.

தற்போது இவர் இயக்கி வரும் பைசன் படம் தூத்துக்குடி, நெல்லை கதைக்களத்தில் விளையாட்டினை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

Avatar photo
John A

ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.