பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. வெகுவாக குறைகிறது சமையல் எண்ணெய் விலை..!

மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்கவரிக்கு விலக்கு அளித்துள்ளதால் சமையல் எண்ணெய் இந்தியாவில் மிக அதிகமாக விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை ரஷ்யா அர்ஜென்டினா பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் சமையல் எண்ணையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் சூரியகாந்தி சோயா எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வரி விலக்கு காரணமாக சமையல் எண்ணெய் விலை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜூன் 30-ம் தேதி வரை தான் இந்த விலக்கு என்பதால் அதன் பிறகு மீண்டும் சமையல் எண்ணெய் அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை உச்சத்தை தொட்டதை அடுத்து ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதித்தனர். கடலை எண்ணெய் நல்லெண்ணெய் விலைக்கு இணையாக பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் விலையும் உயர்ந்துவிட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் தற்போது இரண்டு மாதங்களுக்கு மட்டும் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வரி விலக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்தால் சமையல் எண்ணெய்க்கான இறக்குமதிவரி நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இன்னும் இரண்டு மாதங்களுக்கு சமையல் எண்ணெய் விலை 20 முதல் 40 ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக எண்ணெய் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews