பிரசாந்த் படத்தில் அறிமுகம்.. சின்னத்திரையில் கிடைத்த உயரம்.. ஆனாலும் நடிக்க விரும்பாமல் பாதியில் விலகிய பிரபல நடிகை!

நடிகர் பிரசாந்த் நடித்த திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்த நாயகி பற்றி தற்போது காணலாம்.

நடிகை காவேரி பிறப்பால் ஒரு ஆங்க்லோ இந்தியன். இருந்தாலும் அவருக்கு தமிழ் நன்றாக தெரியும். கல்லூரி படிப்பின் போது அவருக்கு சினிமா மீது ஆசை வந்தது. சினிமாவில் தான் ஒரு பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்று கனவும் கண்டுள்ளார். அப்போது தான் அவருக்கு கடந்த 1990 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் ராதா பாரதி இயக்கத்தில் உருவான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலேயே நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் கேரக்டர் என்பதால் அவர் அந்த படத்தில் தன்னுடைய முழு திறமையும் காண்பித்தார். அவரது ரஞ்சிதா என்ற கேரக்டர் இன்றும் பலரது மனதில் ஞாபகம் இருக்கும் ஒரு கதாபாத்திரமாகும்.

kavery3

முதல் படம் கிடைத்த பெரிய வெற்றி காரணமாக அவருக்கு அதிக திரைப்படங்கள் குவியும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நினைத்தது போல் நடக்கவில்லை. உன்னை நான் வாழ்த்துகிறேன், பந்தய குதிரை போன்ற படங்களில் நடித்த அவர் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

அதன்பின்னர் போக்கிரி தம்பி, சாகசம், செண்பகம், நல்லதே நடக்கும் போன்ற படங்களில் நடித்தாலும், சேதுபதி ஐபிஎஸ் படம் மட்டும் அவருக்கு ஓரளவு பெயரை பெற்று கொடுத்தது. கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான படிக்கிற வயசுல என்ற திரைப்படத்தில் செல்லத்தாய் என்ற கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான் அவரது கவனம் சீரியல் பக்கம் சென்றது. முதல் முறையாக அவர் ஒரு தெலுங்கு சீரியலில் நடித்தார். இதனை அடுத்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தார். அவருக்கு புகழை பெற்று தந்த தொடர் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பான பஞ்சவர்ணக்கிளி தான். அதில் துர்கா என்ற கேரக்டரில் நடித்தார்.

அதன்பிறகு அவரை புகழின் உச்சிக்கு கொண்டு வந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி. இந்த சீரியலில் அவர் தனம் என்ற கேரக்டரை ஆகவே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை அடுத்து மலர்கள் சீரியலில் பத்மினி என்ற கேரக்டரில் நடித்தார். சூர்யா, கஸ்தூரி, அரசி, தங்கம் போன்ற சன் டிவி சீரியல்களில் நடித்து அவர் சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

kavery2

இதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியல் அவருக்கு இன்னும் பெயர் வாங்கி கொடுத்தது. விளக்கு வச்ச நேரத்துல என்ற கலைஞர் டிவியில் ஒளிபரப்பான சீரியல் நடித்த அவர் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் அவரது சின்ன பொண்ணு என்ற கேரக்டர் இன்னும் பேசப்பட்டு வருகிறது.

நடிகை காவேரி ராகேஷ் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு காயத்ரி என்ற சீரியலில் நடித்த பிறகு அவர் சீரியலிலும் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது அவர் திரை உலகம் மற்றும் சின்னத்திரை ஆகிய இரண்டிலும் இருந்து விலகி ஒரு இல்லத்தரசியாகவே வாழ்ந்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்னர் அவருக்கு ஒரு சில சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த போதிலும் நடிப்பதில் விருப்பமில்லை என்று கூறிவிட்டதாகவும் சொல்லப்படுவது உண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...