அவனை நடிகர் ஆக்கிடு.. டூப் போட வந்த பொன்னம்பலத்துக்கு விஜயகாந்த் கொடுத்த கவுரவம்.. அந்த மனுஷன் எனக்கு சாமி..

சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல், நல்ல மனிதராகவும் வாழ்ந்து அனைவரை விட்டு மறைந்தார் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த சமயத்தில் பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரையும் கூட கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருந்தது.

சென்னையே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் என விஜயகாந்த் ஒரு ரவுண்டு வந்த போதிலும் மக்கள் அவரிடம் அதிக அன்போடு இருக்க காரணம், அவரும் அது போல அனைவரிடமும் நடந்து கொண்டதால் தான். சினிமாவில் அனைவரையும் சமமாக பார்த்த விஜயகாந்த், அரசியலில் இன்னும் ஒரு மடங்கு மேலே போனார்.

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த காலம் முதலே தனது வீட்டில் யார் வந்தாலும் அவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவது தான் விஜயகாந்த் பழக்கம். இதே போல, தமிழ் சினிமாவில் பலரின் வாழ்க்கையே மாற்றி எழுதியதே விஜயகாந்த் தான். மன்சூர் அலிகான், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் அவருக்கான வாய்ப்புகளை முடிந்தவரைக்கும் மேம்படுத்தவும் உதவினார் கேப்டன்.

அதில் மிக முக்கியமான ஒருவர் தான் நடிகர் பொன்னம்பலம். இவர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு பின்னர் குணமடைந்த பின் கொடுத்த பல நேர்காணலில் விஜயகாந்த் பற்றி தான் பேசி இருப்பார். அப்படி தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க விஜயகாந்த காரணமாக இருந்தது பற்றியும் பேசி இருந்தார். விஜயகாந்த் நடித்த படத்தின் சண்டைக்காட்சியில் நடிக்க இருந்த ஹிந்தி வில்லன் வரவில்லை என தெரிகிறது.

அப்போது ஷூட்டிங் கேன்சலாகி விஜயகாந்த் வெளியே நிற்க, அங்கே ஓரமாக பாக்கு போட்டு துப்பிக் கொண்டிருந்த பொன்னம்பலத்தை கவனித்துள்ளார். தனது உதவியாளரை அழைத்து அது யார் என கேட்க, ஹிந்தி வில்லனுக்கு டூப் போட வந்தவர் என்றும் கூறுகிறார். ஹிந்தி வில்லன் வரவில்லை என்பதால் இவரையே நடிக்க வைக்கலாம் என விஜயகாந்த் ஆலோசனை கூற, சினிமாவில் கால்தடம் பதித்தார் பொன்னம்பலம்.

அதே போல, தனது தங்கையின் கல்யாணத்திற்காக பணமில்லாமல் பொன்னம்பலம் தவித்த போது, பல நாட்கள் கழித்து அவர் நடிக்க இருந்த சண்டைக் காட்சியை சீக்கிரமே எடுக்க வைத்தார் விஜயகாந்த். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு ஷூட்டிங் முடித்து விட்டு மறுநாள் திருமணத்திற்கு போன விஜயகாந்த், பொன்னம்பலம் கையில் பணத்தை கொடுக்க, தங்கையின் திருமணத்தையும் சுமூகமாக நடத்தி முடித்தார். தனது வீட்டிலேயே விஜயகாந்த் ஃபோட்டோவை வைத்துள்ள பொன்னம்பலம், அவரை கடவுள் உருவிலும் பார்த்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews