எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி வேண்டாம்… புதுமுகங்களை வைத்து தரமான படங்கள்… சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர்..!

இன்றைய இளைஞர்களுக்கு டி.ராஜேந்தர் என்றால் சிம்புவின் அப்பா என்று மட்டுமே தெரியும். அதற்கும் மேல் அவர் அடுக்குமொழியில் பேசுவார் என்று வேண்டுமானால் தெரிந்திருக்கும். ஆனால் தமிழ் திரை உலகில் முதல்முறையாக கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, தயாரிப்பு, டைரக்ஷன் என ஒரு திரைப்படத்தின் அத்தனை பணிகளையும் ஒரே நபர் செய்த சகலகலா வல்லவன் டி ராஜேந்தர் என்பது பலரும் அறியாதது.

இசைஞானி இளையராஜா உச்சத்தில் இருந்த போதே, பல ஹிட் பாடல்களை டி.ராஜேந்தர் கொடுத்திருந்தார். இளையராஜாவின் இசையில் பாடல் எழுத அழைப்பு வந்தபோது அதை மறுத்தார். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி என பிரபல நடிகர்களை தேடி தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் சென்ற நிலையில் புதுமுகங்களை வைத்து யாரும் எதிர்பாராத சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் டி.ராஜேந்தர். அவர் கடைசி வரை தனது படங்களில் பெரிய நடிகர்களை பயன்படுத்தியதே இல்லை என்பது நிசப்தமான உண்மை.

அத்தகைய டி ராஜேந்தர் வாழ்க்கையில் நடந்த சில அறியப்படாத சம்பவங்களை பார்ப்போம். டி ராஜேந்தர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவருக்கு மேடைப்பேச்சில் ஆர்வம் உண்டு. ஒருமுறை பள்ளியில் பேச்சு போட்டியில் கலந்து கொள்ள முயற்சித்த போது அவரை பேச்சு போட்டியில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீங்கள் அனுமதிக்காவிட்டால் என்ன, நானே பேசுகிறேன் என்று வகுப்புக்கு சென்று தனது சக மாணவர்கள் முன்னிலையில் தானே தயாரித்த உரையை அடுக்குமொழியில் பேசினார். அப்போது அவருடைய சக மாணவர்கள் அவரை கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பொட்டிக்கடை வச்சு பொழைச்சுக்கோ…. கேலி செய்த திரையுலகம்…. தேசிய விருது வாங்கிய இயக்குனர் அகத்தியன்….!!

இதனை அடுத்து பள்ளியில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் கல்லூரிக்கு சென்ற பின்னரும் பேச்சுப்போட்டி, நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டார். அவருக்கு மிகப்பெரிய பலமே அவரது அடுக்குமொழி மற்றும் எதுகை மோனை பேச்சு தான். மயிலாடுதுறை கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற டி.ராஜேந்தர் அதன்பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

கல்லூரிக்கு தினமும் அவர் ரயிலில் செல்லும்போது ரயிலில் தாளம் போட்டு பாட்டு பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். டி.ராஜேந்தர் வந்துவிட்டார் என்றாலே சக மாணவர்கள் உடனடியாக பாட்டு கேட்க தயாராகி விடுவார்களா. அப்போதெல்லாம் நிலக்கரி எஞ்சின் ரயில் தான் இருக்கும். அந்த ரயில் சத்தத்தையும் மீறி டி ராஜேந்தர் தனது குரலில் பாடியதாகவும் அந்த பாடல்களை அவரே இயற்றி, மெட்டுக்கள் அமைத்து பாடியதாகவும் அதை கேட்பதற்கே ஒரு பெரும் கூட்டம் ரயிலில் இருக்கும் என்றும் கூறப்படுவதுண்டு.

கல்லூரியில் பாட்டு ஆட்டம் பேச்சுப்போட்டி என பல்வேறு திறமைகளை காட்டினாலும் படிப்பிலும் இவர் கெட்டிக்காரராக இருந்துள்ளார். கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கி அனைவரின் பாராட்டுக்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது. அவரது பெற்றோர்கள் டி ராஜேந்தர் ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம். ஆனால் தனக்கு சினிமாவில் மீது தான் விருப்பம், சினிமாவில் சாதிக்க வேண்டும், அதுவும் மற்றவர்கள் போல் வெறும் இயக்குனர் என்று இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் என்று எல்லாத் துறைகளும் தான் சாதிக்க வேண்டும் என்று கூறினாராம்.

அவரது தன்னம்பிக்கையை அவரது வீட்டில் உள்ளவர்கள் பாராட்டினாலும் அவரது நண்பர்கள் உற்றார் உறவினர்கள் கேலி செய்ததாகவும் கூறப்படுவது உண்டு. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று மயிலாடுதுறையிலிருந்து சென்னை வந்த டி.ராஜேந்தர் தனது நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கி இருந்து சினிமா வாய்ப்புகளை தேடி உள்ளார். தானே திரைக்கதை வசனம் எழுதி காட்சிகளுக்கு ஏற்ற வகையில் பாடல்களை எழுதி இசையமைத்து அவர் தயாரிப்பாளளிடம் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் ஒரு போன் கால்…. உதவியாளரில் தொடங்கி இயக்குனர் வரை….. சாதித்து காட்டிய லாரன்ஸ்….!!

ஆனால் அவருக்கு எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் தான் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் இப்ராஹிம் என்பதை தெரிந்து அவரை பார்ப்பதற்காக அவருடைய திருநெல்வேலி வீட்டிற்கு சென்று கதையை கூறியுள்ளார். அவருக்கு கதை பிடித்திருந்தாலும் உடனடியாக அவர் டி.ராஜேந்தரை வைத்து படம் எடுக்க ஒப்புக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் அவரிடம் அலைந்து தான் ஒரு தலை ராகம் படத்தின் வாய்ப்பை பெற்றார்.

அதன் பிறகு தான் ஒரு தலை ராகம் படம் உருவானது. சங்கர், ரூபா, சந்திரசேகர், தியாகு உட்பட ஒரு சிலர் நடிக்க டி.ராஜேந்தர் இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் இசை பாடல்கள் என அனைத்து பணிகளையும் செய்திருந்தார். ஆனால் தயாரிப்பாளர் இப்ராஹிம் இயக்குனர் உள்பட அனைத்து பணிகளுக்கும் தன்னுடைய பெயரை  போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பாடல்கள் இசை என மட்டுமே டி ராஜேந்தர் பெயர் இருந்தது.

இந்த படம் கடந்த 1980 ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி வெளியானது. முதல் இரண்டு நாள் இந்த படத்திற்கு சுத்தமாக கூட்டமே இல்லை. அதன் பிறகு பாடல்கள் ஹிட்டானதை அடுத்து படம் பார்த்தவர்கள் சொன்ன பாசிட்டிவ் விமர்சனங்களை அடுத்து இந்த படத்திற்கு கூட்டம் வந்தது. ஒரு கட்டத்தில் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிப் போகும் அளவுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படம் வெற்றி பெற்றாலும் இந்த வெற்றியை டி.ராஜேந்தர் உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. பாடல்கள் இசை மட்டும் தான் இந்த படத்தில் டி.ராஜேந்தர் பணி புரிந்ததாக டைட்டிலில் போடப்பட்டது. இருப்பினும் டி ராஜேந்தர் மனம் தளரவில்லை. இதனை அடுத்து தான் இரண்டாவது படமாக வசந்த அழைப்புகள் என்ற படத்தை இயக்கினார்.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை என்று அனைத்து பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு இந்த படத்தை உருவாக்கினார். இந்த படம் ஒரு தலை ராகம் அளவுக்கு சூப்பர் ஹிட் ஆகவில்லை என்றாலும் ஓரளவுக்கு ஹிட்டானது. இதனை அடுத்து அவர் ரயில் பயணங்களில் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து டி ராஜேந்தர் யார் என்பது உலகிற்கு தெரிய வந்தது.

 

டி ராஜேந்தரை தமிழகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய நடிகராகவும் சகலகலா வல்லவனாகவும் உருவாக்கியது உயிர் உள்ளவரை உஷா என்ற திரைப்படம் தான். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று யார் இந்த டி.ராஜேந்தர்? என்று திரையுலகினரே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தில் தான் நளினி அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு தொடர் வெற்றி தான். தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார்.

இளையராஜாவுக்கே இசை டெஸ்ட் வைத்த தயாரிப்பாளர்.. வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட இசைஞானி..!

இடையில் சில படங்களுக்கு அவர் பாடல்கள் எழுதி இசையமைத்து கொடுத்தார். தமிழ் திரை உலகில் அடுக்குமொழி வசனங்களை முதல் முதலில் அறிமுகப்படுத்தியது டி.ராஜேந்தர் என்பதும் அவரது அடுக்குமொழி வசனங்கள் இன்று கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானாலும் ஒரு காலத்தில் அதை கேட்பதற்காகவே படம் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts